விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்விக்கு அது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது என்று அப்படத்தின் இயக்குனர் அட்லி கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தெறி’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் அட்லி பத்திரிகையாளர்களிடம் விரிவாக பேசினார். அப்போது அவர் பேசும்போது, ‘தெறி’ படத்தை ‘சத்ரியன்’ படத்தோடு ஒப்பிடுகிறார்கள். இது முழுக்க முழுக்க வேறுமாதிரியான படம்.
இந்த படத்தில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பது என உண்மை நிகழ்வுகளை படமாக்கியிருக்கிறோம். நான் சங்கர் சாரிடம் உதவியாளராக பணிபுரிந்திருந்தாலும், ஷங்கர், மணிரத்னம், பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, பாக்யராஜ் ஆகியோரைத்தான் குருவாக நினைக்கிறேன்.
சந்தானம் இந்த படத்தில் இல்லை என்ற குறையை ராதிகா சரத்குமார், சமந்தா, நைனிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தீர்த்திருக்கிறார்கள். இந்த படத்தின் சண்டைக் காட்சிக்காக விஜய் ரொம்பவும் ரிஸ்க் எடுத்திருக்கிறார். நம் வீட்டில் ஒரு போலீஸ் இருந்தால் எந்தமாதிரியான உணர்வு இருக்குமோ, அது இந்த படத்தை பார்க்கும்போதும் இருக்கும்.
பொதுவா விஜய் படங்கள் என்றால் இடைவேளையின்போது ஒரு மாஸ் இருக்கும். ஆனால், இந்த படத்தில் ஒரு எமோஷனல் இருக்கும். இடைவேளைக்கு முன்பு மொட்டை ராஜேந்திரன் பேசும் வசனங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு எமோஷனை உருவாக்கும் என சொல்லலாம்.
இந்த படத்தின் வசனங்களை கேட்டுவிட்டு, மகேந்திரன் சார் அவருடைய அடுத்த படத்துக்கு என்னை வசனம் எழுத அழைப்பு விடுத்தார். அதை கேட்டதுமே, அன்று முழுவதும் எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை. விஜய் ‘தெறி’ படத்தை முழுவதும் பார்த்துவிட்டு சூப்பரா இருக்குங்கன்னா என்று சொன்னார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று அனைவரும் கேட்கிறார்கள். அது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் எந்தமாதிரி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே இரண்டாம் பாகம் எடுக்கலாமா? என்று முடிவெடுக்க முடியும் என்று பேசினார்.