மராட்டிய மாநிலத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. பல மாவட்டங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்துவரும் நிலையில் பல்வேறு தண்ணீர் சிக்கன நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பீர் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படும் தண்ணீரின் அளவை 20 சதவீதம் குறைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’வில் இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.
அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மராத்வாடா பகுதியில் பீர் தயாரிக்கும் பத்து பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு வெறும் 20 சதவீதம் குடிநீரை குறைத்துக் கொள்வதால் மட்டும் குடிநீர் பஞ்சம் தீர்ந்து விடப்போவதில்லை. போதிய குடிநீர் கிடைக்காமல் திண்டாடும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றுவது தொடர்பாக இந்த பீர் தொழிற்சாலைகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கான, இடைக்கால செயல்திட்டத்தை மாநில அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள சில பா.ஜ.க. மந்திரிகள் பீர் தொழிற்சாலைகளுக்கு தங்குதடையில்லாத தண்ணீர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஆனால், மக்களோ.., விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் முதலில் காப்பாற்றப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.
தண்ணீருக்கு பதிலாக பீர் குடிக்கும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் இல்லை. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வாழும் மக்கள் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீரை விலை கொடுத்து, வாங்கிக் குடிக்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் அல்ல. இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்சனை வரும் என்ற நினைத்தோ, என்னவோ.., சில ஆண்டுகளாக நாட்டிலுள்ள பல வாலிபர்கள் ‘conserve water, drink beer´ என்ற வாசகங்களுடன் கூடிய டி ஷர்ட்டுடன் நாட்டின் பல பகுதிகளில் சுற்றி வருகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.