உலக விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அசத்தும் வீரர், வீராங்கனைக்கு புகழ்பெற்ற ‘லாரெஸ்’ விருது வழங்கப்படுகிறது. ‘விளையாட்டின் ஆஸ்கார்’ என்று அழைக்கப்படும் இந்த விருது 2000-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு ஜாம்பவான்கள், தொழில்முறை விளையாட்டு எடிட்டர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய லாரெஸ் ஸ்போர்ட்ஸ் கமிட்டி விருதுக்கு தகுதியானவரை தேர்வு செய்து கவுரவிக்கிறது.
இதன்படி 17-வது லாரெஸ் விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று முன்தினம் இரவு வெகுவிமரிசையாக நடந்தது.
இதில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இந்த ஆண்டுக்கான லாரெஸ் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார். இவர் ஏற்கனவே 2012, 2015-ம் ஆண்டுகளிலும் இந்த விருதை பெற்றிருக்கிறார்.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட், பார்முலா1 கார்பந்தய நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் ஆகியோரும் இதற்கான போட்டியில் இருந்த போதிலும் அவர்களை ஜோகோவிச் பின்னுக்கு தள்ளிவிட்டார்.
2015-ம் ஆண்டில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி அமர்க்களப்படுத்திய ஜோகோவிச் 88 ஆட்டங்களில் 82-ல் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறும் போது, ‘இந்த விருதை பெறுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன். என்னிடம் சிறந்த குழுவினர் (பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமல்ல. டென்னிஸ் மீது நான் கொண்டுள்ள காதல் மற்றும் ஆர்வத்துக்கு கடமைப்பட்டுள்ளேன். அது தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. எனக்குள் பல்வேறு வகையில் உந்து சக்தியாக இருந்த நிக்கி லாவ்டா (முன்னாள் பார்முலா1 கார்பந்தய வீரர்), சமீபத்தில் மறைந்த கால்பந்து ஜாம்பவான் நெதர்லாந்தின் ஜோஹன் கிருப் ஆகியோருக்கு இந்த விருதை சமப்பிக்கிறேன்’ என்றார்.
இதே போல் கடந்த ஆண்டு 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதோடு டென்னிஸ் உலகில் ‘நம்பர் ஒன்’ ராணியாக வலம் வரும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வானார். அவர் இந்த விருதை பெறுவது இது 3-வது முறையாகும். ஆனால் விழாவுக்கு அவர் வரவில்லை.
வாழ்நாள் சாதனையாளர் விருதை மூன்று முறை பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றவரான ஆஸ்திரியாவின் 67 வயதான நிக்கி லாவ்டாவுக்கு வழங்கப்பட்டது. ‘‘இந்த விருதை தோல்வி அடைவோருக்கு அர்ப்பணிக்கிறேன். ஏனெனில் தோல்வியில் இருந்து தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்’ என்று லாவ்டா குறிப்பிட்டார். உலக ரக்பி சாம்பியன் நியூசிலாந்து அணி, உலகின் சிறந்த அணிக்குரிய விருதை தனதாக்கியது.