பீப் சாங் வெளியான விஷயத்தில் சிம்பு, மகளிர் அமைப்புகளின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும்விதமாக சிம்புவின் அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது,
எனது மகன் டி.ஆர்.சிலம்பரசன் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து விலக இருப்பதாக ஒரு தகவல் வெளியானதற்கு பின்னால், நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் விஷால், கார்த்தி ஆகியோர் என்னை தொடர்பு கொண்டபோது, நானும், எனது மகனும் இந்த பீப் சாங் விஷயத்தை சட்டரீதியாக எதிர்கொள்கிறோம் என்று சொன்னதாக சொல்லியிருந்தார்கள். அது உண்மைதான்.
நான் சட்ட ரீதியாக எதிர்கொள்கிறேன் என்று சொன்னேன், சொன்னபடியே இறைவன் அருளால் அத்தனை நீதிமன்றங்களில் ஏறி இறங்கி வழக்குகளையும், வந்த விமர்சனங்கள் அத்தனையும் சந்தித்தோம். இன்னும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் என் மகன் பீப் சாங்கை வெளியிடவில்லை. யாரோ திருடி வெளியிட்டு விட்டார்கள் என்பதே உண்மை. அதற்காகதான் வழக்கு மன்றத்திலேயே போராடி கொண்டு இருக்கிறோம்.
அப்படியிருக்க உண்மை நிலை என்ன என்பதை, உள்நோக்கி ஆராய்ந்து பார்க்காமல் விஷால், சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு கருத்து சொன்னது என்ன நியாயம்? செய்யாத தப்புக்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே எங்கள் வாதம். இந்த வருத்தம் எனக்கும் இருந்தது, என் மகனுக்கும் இருந்தது.
ஒரு சங்கம் என்று இருந்தால் ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யவேண்டும். இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும். விஷால் எதிர்காலத்திலாவது என் மகன் விஷயத்தில் நடந்துகொண்டதைப்போல, மற்ற உறுப்பினர்கள் ஒருவேளை யாராவது பாதிக்கப்படும் விஷயத்தில் நடந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.
என் மகன் சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்ததுடன் என்னையும், என் மகனையும் தொடர்பு கொண்டு இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்லி, எங்கள் மீது அக்கறைக்காட்டிய மூத்த நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வேளையில் ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில், ஒரு கருத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். என் மகன் சிம்பு ஆனாலும் சரி, யாராக இருந்தாலும் சரி தேர்தலில் வெற்றி பெற்ற அணியினரை மட்டும் பார்க்கக்கூடாது. மிக குறைந்த வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும்கூட, சிம்புவுக்காக அத்தனை நல்ல நெஞ்சங்களையும் எண்ணி பார்க்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக என் மகனுக்காக தாயுள்ளத்தோடு முன்வந்து, நான் மன்னிப்பு கேட்கிறேன் என்ற நல்ல மனதுடன் சொன்ன முத்திரை பதித்த நடிகர், அனுபவமிக்க அன்பு சகோதரர், நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களையும் எண்ணி பார்க்க வேண்டும். அப்படி நல்ல இதயம் படைத்த நாசர், நடிகர் சங்கத்தில்தான் இருக்கிறார்.
கடைசியாக ஒன்று, சிம்புவை பள்ளிக்கூடத்தில் கொண்டு சேர்த்த தந்தையும் நான்தான். இளம்பருவத்திலே நடிகர் சங்கத்திலே சென்று நடிகனாக சேர்த்து விட்ட கலைஞனும் நான்தான். நடிகர் சங்கத்திற்கு நாம் என்ன செய்தோம் என்பதைதான், நாம் எண்ணி பார்க்கவேண்டும். நடிகர் சங்கம், நமக்கு என்ன செய்தது என்பதை பற்றி நாம் கவலைப்படக்கூடாது.
இளம் பருவத்திலிருந்து காலம் தொட்டு இந்நாள் வரை நடிகர் சங்கத்திற்காக சிம்பு, நீ ஆடி இருக்கிறாய், பாடி இருக்கிறாய், ஓடி ஓடி உழைத்திருக்கிறாய், இது வரலாறு. நம்முடைய முன்னோர்கள் மறைந்துவிட்ட கலைவாணர் என்.எஸ்.கே., மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்ற எண்ணற்ற தென்னிந்திய கலைஞர்கள் கட்டி காத்தது நமது தென்னிந்திய நடிகர் சங்கம்.
அதைவிட்டு விலக வேண்டாம், உன் முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே உன் தந்தை என்ற முறையில் என் கருத்து. இதற்கு மேல் உனக்கென்று தனி கொள்கை இருக்கலாம், சுயமரியாதை உணர்வு இருக்கலாம், அதை நான் மதிக்கிறேன்.
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக மந்திரி பதவிக்கு இணையான மாநில சிறுசேமிப்புத்துறை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தவன் நான். ஆனாலும், கடவுள் அருளால் காலம் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ஒன்று சொல்கிறேன். வேத்தைவிட விவேகம்தான் வெல்லும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.