நாயகன் ரயான் தஞ்சை பகுதியில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே கிராமத்தில் வசிக்கும் நாயகி கல்பனா ஜெயத்தை காதலித்து வருகிறார். இவர்களது காதல் கைகூடி கல்யாணம் வரை செல்லும் வேளையில் நாயகன் மீது கற்பழிப்பு கொலைப்பழி விழுந்து ஜெயிலுக்கு செல்ல நேரிடுகிறது.
இதேபோல், கற்பழிப்பு கொலை சுமத்தப்பட்ட மூன்று இளைஞர்களும் நாயகன் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு வருகிறார்கள். ஜெயிலுக்குள் அவர்கள் மூன்று பேரும் நாயகனுக்கு நண்பர்களாகிறார்கள். சிறையிலிருந்து வெளியே வரும் நண்பர்கள் நாம் ஒன்றாக இருந்தால் பழைய நினைவுகள் வரும் என்று பிரிய முடிவு செய்கிறார்கள்.
இருந்தாலும், தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்கும் உணர்வு வந்ததும் ஒன்று சேர்ந்து எதிரிகளை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இந்த திட்டத்தை எப்படி செய்து முடிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
நாயகன் ரயான் ராஜ் அடக்கமான அளவான நடிப்பில் கவர்கிறார். நாயகி கல்பனா ஜெயம் புதுமுகம் என்றாலும், நடிப்பில் அது தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். கடைசி காட்சியில் தனது கணவனை கொல்ல துடிக்கும் முன்னாள் காதலனிடம் உயிர்பிச்சை கேட்கும் காட்சிகள் எல்லாம் இவரது நடிப்புக்கு உதாரணம்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் முஜீப், விறுவிறு நடிப்பில் கவர்கிறார். வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டி மனதில் எளிதில் பதிகிறார். நண்பர்களாக வரும் இளைஞர்கள் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
போலீசால் தவறாக போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி சொல்லியிருக்கும் படம். வன்முறையான படம் என்றாலும், படத்தில் வன்முறை வேண்டாம் என்ற கருத்து சொன்ன வகையில் இயக்குனருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். புதுமுகங்களை வைத்து இவ்வளவு பலமான கதையை படமாக்க துணிந்த இவரை பாராட்டியே ஆகவேண்டும். காட்சிப்படுத்தலில் சில தவறுகளை சொல்லியிருந்தாலும், இவர் சொல்ல வந்த கருத்துக்காக படத்தை பார்க்கலாம்.
ராஜபார்த்திபனின் ஒளிப்பதிவில் பாடல்கள் காட்சிகள் அழகாக இருக்கிறது. அதேபோல் கோவில் திருவிழா காட்சிகள், வயல்வெளிகள் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றன. ரவி ராகவ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ‘குள்ளச்சி கள்ளச்சி’ பாடல் மட்டும் மனதில் பதிகிறது. பின்னணி இசை வசனத்தை கேட்கவிடாமல் இடைஞ்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் ‘முதல் தகவல் அறிக்கை’ சமூக அக்கறை.