மராட்டிய மாநிலம் தானேயில் கோலாப்பூர் என்ற இடத்தில் மராட்டிய மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒரு மருந்து தயாரிப்பு குடோனில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த மருந்து குடோனில் மருந்து பொருட்களுக்கு மத்தியில் போதை பொருளும் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வகை மருந்துகளையும் ஆய்வு செய்தனர்.
இதில் 21 டன் எடையுள்ள கொடிய போதை மருந்து கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2 ஆயிரம் கோடியாகும். இந்த அளவுக்கு போதை பொருள் பதுக்கப்பட்டு இருப்பதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நைஜீரிய கடத்தல் காரன் சிப்ரன் சினஸ்சா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டதாக தானே போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் தெரிவித்தார். இது நாட்டிலேயே மிகப் பெரிய போதை பொருள் வேட்டையாகும்.
கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை மம்தா குல்கர்னி அவரது கணவரான கென்பாவைச் சேர்ந்த விக்கி கோஸ்வாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பின் இருவரும் போலீசில் சிக்குகிறார்கள்.
இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். மராட்டியம் மற்றும் குஜராத் மாநில போலீசார் கூட்டாக வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.