மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மகனாக பிறக்கிறார் மஞ்சு விஷ்ணு. இவர் பிறந்ததும் அம்மா இறந்துவிடவே, பாட்டி மனோரமாவின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவனாகிறார். பெரிய தொழிலதிபரான நாசரின் வீட்டில் மனோரமாவும், மஞ்சு விஷ்ணுவும் எடுபிடி வேலைகள் செய்து வருகின்றனர். நாசர் தனது தங்கையான மம்தா மோகன்தாஸை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், மிகப்பெரிய தொழிலதிபரின் மகனுடன் மம்தா மோகன்தாஸுக்கு காதல் ஏற்படவே, இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது, மம்தா மோகன்தாஸ் ஜாதகத்தில் முதல் கணவன் இறந்துவிடுவான் என்று இருக்கவே, அதை பொருட்படுத்தாமல் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாகின்றனர்.
இந்நிலையில், நிச்சயதார்த்தத்தின்போது மாப்பிள்ளைக்கு எதிர்பாராதவிதமாக அடிபடவே, ஜாதகத்தில் கூறியது உண்மை என்று மாப்பிள்ளை வீட்டார் பயப்படுகின்றனர். என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தனது குடும்பத்திற்காக உயிரையும் கொடுக்க துணிந்த மஞ்சு விஷ்ணுவுக்கு முதல் திருமணம் செய்துகொடுத்துவிட்டு, பின்னர் அவன் இறந்தபிறகு தொழிலதிபரின் மகனுக்கு மம்தாவை திருமணம் செய்துகொடுக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.
அதன்படி, மஞ்சு விஷ்ணுவுக்கும், மம்தாவுக்கும் திருமணம் நடக்கிறது. மம்தா ஜாதகத்தில் இருக்கும் பிரச்சினை தெரியாமல் மஞ்சு விஷ்ணு திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாத மம்தா, மஞ்சு விஷ்ணுவை வெறுத்து ஒதுக்குகிறார். ஒருகட்டத்தில் ஜாதகத்தில் உள்ள குறைபாடுக்காகவே அவரை திருமணம் செய்துகொண்டதாக மஞ்சு விஷ்ணுவிடம் போட்டு உடைக்கிறார் நாசர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சு விஷ்ணு தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளையும் ஏதோ ஒரு சக்தி தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றுகிறது. அது என்ன சக்தி? இவருடைய உண்மையான அன்பை மம்தா புரிந்துகொண்டு விஷ்ணுவை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
மஞ்சு விஷ்ணு படம் முழுக்க அப்பாவி முகத்துடன் வலம் வந்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பிலும் மிளிர்கிறார். ஜாதகத்தில் உள்ள குறைபாட்டால்தான் நாசர் தனது தங்கையை திருமணம் செய்துகொடுத்தாக கூறியதும், இவரது முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. மம்தா மோகன்தாஸ் கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே ரகம்தான்.
பிற்பாதிக்கு பிறகு வரும் நாகர்ஜூனா, தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாசர், மனோரமா, பரமானந்தம் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தெலுங்கில் ‘கிருஷ்ணஅர்ஜூனா’ என்ற பெயரில் 2008ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘ரவுடி மாப்ளே’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம். பி.வாசு இப்படத்தை இயக்கியிருக்கிறார். 8 வருடங்கள் கழித்து தமிழில் வெளியாவதால் படம் பார்ப்பவர்களுக்கு பழைய படம் பார்த்த உணர்வுதான் ஏற்படுகிறது.
கீரவாணி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘ரவுடி மாப்ளே’ சாது.