நாயகன் ராஜ் வர்மாவும், அவரது நண்பரான சிங்கம் புலியும் சாலை துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றனர். அதேவேளையில், ஊனமுற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை நடத்தி வரும் பாண்டியராஜன் அரவணைப்பில் வளர்ந்துவரும் நாயகி செரீனா, படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஆராய்ச்சி செய்யலாம் என்ற யோசனையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஒருநாள் செரீனாவின் விலையுயர்ந்த மோதிரம் குப்பைத்தொட்டியில் விழ, அதை ராஜ்வர்மா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்கள். அதற்கு கைமாறாக நாயகி, நாயகனுடைய நண்பர்களுக்கு பணம் கொடுக்கிறாள். அதை வாங்கிக்கொள்ளும் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள், பின்னர் அந்த மோதிரத்தின் மதிப்பை அறிந்துகொண்டு அவளிடம் அதிகமாக பணம் எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி சந்திப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், நாயகி, குப்பையில் இருந்து டீசல் தயாரிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்குகிறாள். இதற்கு உறுதுணையாக நாயகனையும் கூடவே வைத்துக் கொள்கிறாள். தன்னுடன் நெருங்கி பழகும் நாயகி மீது நாயகனுக்கு காதல் ஏற்படுகிறது. அதை அவளிடம் சொல்லவும் முதலில் மறுக்கிறாள். பிறகு, ஒருகட்டத்தில் அவளும் நாயகன் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறாள்.
நாயகியின் ஆராய்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இந்த ஆராய்ச்சி பற்றி தெரிந்துகொண்ட பாண்டியராஜன், அதை வெளிநாட்டுக்கு விற்று பணமாக்க நினைக்குகிறார். இவரது சூழ்ச்சியால் நாயகி இவரிடம் சிக்கிக்கொள்கிறார்.
இறுதியில் பாண்டியராஜனிடம் இருந்து நாயகியை மீட்டாரா? இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே கிளைமாக்ஸ்.
நாயகன் ராஜ் வர்மா துப்புரவு பணியாளராக நடித்திருக்கிறார். பலர் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். அப்பாவி முகத்துடன் படம் முழுக்க வலம் வந்தாலும் இறுதிக் காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
நாயகி செரீனா சமூக அக்கறை கொண்ட ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மென்மையான வில்லத்தனத்தில் பாண்டியராஜன் மிரட்டியிருக்கிறார். படம் முழுக்க நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சிங்கம் புலி.
வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்துள்ள நிலையில், அதிலிருந்து சற்று மாறுபட்ட கோணத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் மூர்த்தி கண்ணன். சிறிய பட்ஜெட்டில் நல்ல செய்தியை கொடுத்திருக்கிறார்.
சேதுராம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி ரசிக்கும் படியாக உள்ளது. தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சாலையோரம்’ பரவாயில்லை.