பாழடைந்த வீடுகளை சதி திட்டம் செய்து சொத்துக்களை அபகரித்து வருகிறார் மதுசூதனன். இவருடைய மகன் அம்ஜத், மதுசூதனின் எதிர்ப்பை மீறி தான் காதலித்து வந்த லட்சுமி பிரியாவை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவிற்கு சென்று விடுகிறார்.
அம்ஜத், லட்சுமி பிரியாவின் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், சென்னைக்கு வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்கு, ஜமீன்தாருக்கு சொந்தமான அரண்மனை பங்களா ஒன்றை அபகரித்து, புதுப்பித்து கொடுக்கிறார் மதுசூதனன்.
அந்த வீட்டில் தங்கும் லட்சுமி பிரியாவை ஏதோ ஒன்று பயமுறுத்துகிறது. இதனால் பயந்து போன அம்ஜத் மற்றும் லட்சுமி பிரியா இருவரும் ஓவியர் பூஜா மூலம் இந்த வீட்டில் பேய் இருப்பதை அறிந்துக் கொள்கிறார்கள். பூஜா உதவியால் ஸ்ரீனிவாசன் என்னும் மந்திரவாதி பேய் ஓட்ட வருகிறார். இந்த வீட்டை சுற்றி பார்த்த ஸ்ரீனிவாசனுக்கு கடிதம் ஒன்று கிடைக்கிறது. இதில் இந்த வீட்டில் தங்குபவர்கள் இறந்துவிடுவார்கள் என்று எழுதியிருக்கிறது.
இதற்கிடையில், வேலைக்காரி கனி இறந்து போகிறார். மேலும் வீட்டில் பேயைப் பார்த்து பயந்து போன மதுசூதனன் மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இந்நிலையில், ராஜவம்சத்தை பின்னணியில் கொண்டு தற்போது ஏழையாக இருக்கும் ஒருவனுக்கு இந்த பங்களாவை பரிசாகக் கொடுத்துவிட்டால் பேய் உங்களை விட்டு விலகி விடும் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.
இதைகேட்ட அம்ஜத் ராஜவம்சத்தை கொண்ட வாரிசை கண்டுபிடித்து, அந்த பங்களாவை எழுதி கொடுத்தாரா? அந்த பங்களாவில் இருக்கும் பேய் யார்? எதற்காக அம்ஜத் குடும்பத்தை பயமுறுத்துகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் அம்ஜத், லட்சுமி பிரியா ஆகியோர் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மதுசூதனன் வழக்கமான வில்லனாகவே வந்திருக்கிறார். ஓவியர் பூஜா, பேயை விரட்ட வரும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாசருக்கு படத்தில் பெரியதாக வாய்ப்பில்லை.
வழக்கமான பேய் படத்தை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ். கதாபாத்திரங்களை வைத்து திறமையாக வேலை வாங்க தெரிந்த இவருக்கு திரைக்கதையை சரியாக கையாள தெரியவில்லை. நீண்ட காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. இறுதியில் வரும் திருப்பம் மட்டும் பெரிய ஆறுதல். வழக்கமான பேய் படங்கள் போலவே இப்படமும் அமைந்திருக்கிறது.
முகேஷ் ஒளிப்பதிவை ஓரளவே ரசிக்க முடிகிறது. பிரகாஷ் நிக்கியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘களம்’ பழையது.