அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில், செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இதன்படி இந்த விருந்து நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனால், அவர் பதவிக்காலத்தில் நடக்கும் கடைசி விருந்து என்பதால், விருந்து நிகழ்ச்சி உணர்ச்சிபூர்வமாகவும், கலகலப்பாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய நடிகை, பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா(33) தற்போது, ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த, ‘குவான்டிகோ’ என்ற, ‘டிவி’ தொடர், அமெரிக்காவில் பெரும் வெற்றி பெற்றுள்ளது; இதனைத் தொடர்ந்து, ‘பே வாட்ச்’ என்ற ஹாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக, அவர், அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், ஒபாமாவுடனான தனது சந்திப்பு குறித்து சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா “மிகவும் வேடிக்கையான மற்றும் அழகான ஒபாமா மற்றும் அழகான மிச்சேல் ஒபாமாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒரு அழகான மாலைக்கு (விருந்துக்கு) நன்றி. உங்கள் பெண்கள் கல்வி திட்டத்தில் சேர்ந்து வேலை செய்ய காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா ‘சிறுமிகளை கல்வி கற்க அனுமதிப்போம்’ என்ற திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இத்திட்டம் மூலம் உலகம் முழுவதும் பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கும் 62 மில்லியன் சிறுமிகளை பள்ளிக்கு அனுப்ப முயற்சி எடுத்து வருகிறார். இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் இணைந்து செயல்படவுள்ளார்.