ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஜெய் ஆகாஷ், தனக்கு தமிழ் தெரியாமல் இருந்தாலும், ஒரு தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். பின்னர் லண்டனில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து, காதல் மனைவியுடன் அங்கு சென்று செட்டிலாகிறார்.
இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஒரு நாள் சாலையில் ஜெய் ஆகாஷுக்கு விபத்து ஏற்படுகிறது. காரை ஓட்டி வந்தவர் ஒரு டாக்டர் என்பதால், அவரே ஜெய் ஆகாஷுக்கு சிகிச்சை அளிக்கிறார். அப்போது ஒரு சிறிய ஆபரேஷனுக்கு பிறகு ஜெய் ஆகாஷுக்கு நினைவு திரும்புகிறது.
அதன் பிறகு ஜெய் ஆகாஷுக்குள் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஸ்பிலிட் பெர்சனாலிட்டியால் பாதிக்கப்படுகிறார். அதாவது உடல் ஜெய் ஆகாஷாகவும், உள்ளம் வேறொருவர் மாதிரியாகவும் நடந்து கொள்கிறார். இதனால் இவருக்கு பல பிரச்சனைகள் எற்படுகிறது. மேலும் காதல் மனைவியுடனும் பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் ஜெய் ஆகாஷ் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்தாரா? ஸ்பிலிட் பெர்சனாலிட்டியாக வருபவர் யார்? இதற்கெல்லாம் காரணம் யார்? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெய் ஆகாஷ், சினிமா துறையில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு முழுமூச்சாக நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் இவருக்கு கை கொடுக்க வில்லை. இப்படமாவது இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. இவரது நடிப்பு, நடனம், சண்டை என ரசிக்கும்படி இருந்தாலும் ஏதோ ஒன்று ஜெய் ஆகாஷுக்கு பலவீனமாக அமைந்து விடுகிறது.
இந்த படத்திற்கு கதையும், திரைக்கதையும் ஜெய் ஆகாஷே எழுதியிருக்கிறார். கதையிலும், திரைக்கதையிலும் தெளிவு இல்லை. பல காட்சிகளை பார்க்கும்போது மற்ற படங்களின் காட்சிகளை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தன்னால் முடிந்த வரை சிறப்பாக இயக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராதா.
நாயகியாக நடித்திருக்கும் சோனியா ஷர்மாவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
யு.கே.முரளி இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவா ராஜ் ஒளிப்பதிவும், சாம்ராட் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
மொத்தத்தில் ‘நான் யார்?’ கேள்விக்குறி தான்.