கிராமத்தில் வசித்து வரும் நாயகி திவ்யா நாகேஷ், அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். அந்த தொழிற்சாலை உரிமையாளரின் மகனான நாயகன் ரவீந்திரன் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு அந்த கிராமத்துக்கு வருகிறார். தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் நாயகியை முதல்முறை பார்த்ததுமே இவருக்கு பிடித்து போய்விடுகிறது.
இந்நிலையில், ஒருநாள் திவ்யா தனது குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும்போது, பஸ் இல்லாத காரணத்தால், அவர்களது குடும்பதை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று உதவி செய்கிறார் ரவீந்திரன். இதனால், திவ்யாவுக்கு ரவீந்திரன் மீது நல்ல எண்ணம் உருவாகிறது. அது நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வருகிறார்கள்.
அதேநேரத்தில், அந்த கிராமத்தில் தவறான முறையில் நடந்துகொள்ளும் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில், ரவீந்திரன், திவ்யாவின் காதல் விஷயம் ரவீந்திரனின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. முதலில் ரவீந்திரனை கண்டிக்கும் அவர், ஒருகட்டத்தில் தன்னுடைய பேச்சை கேட்காத ரவீந்திரனை திவ்யாவிடமிருந்து பிரிக்க, மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.
இந்நிலையில், கிராமத்தில் நாயகி திவ்யா மர்மமான முறையில் காணாமல் போகிறார். அவரது அப்பாவான நிழல்கள் ரவி தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். போலீசும் திவ்யாவை தேடும் பணியில் தீவிரமாகிறது. இதற்கிடையில், மும்பையில் இருந்து கிராமத்துக்கு வரும் ரவீந்திரன், திவ்யா காணாமல் போன செய்தியை கேள்விப்பட்டதும், தனது அப்பாதான் இதற்கு காரணமாக இருக்கும் என்று அவர்மீது போலீசில் புகார் கொடுக்கிறார்.
இறுதியில் காணாமல் போன திவ்யாவிற்கு என்ன ஆனது? ரவீந்திரன் திவ்யாவை கண்டுபிடித்து காதலில் ஒன்று சேர்ந்தாரா? மர்மான முறையில் பெண்களை கொலை செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரவீந்திரன், வசதியான பையனாக காதலிக்கும் இளைஞனாகவும், காதலுக்காக தந்தையை எதிர்க்கும் மகனாகவும் நடித்திருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை ஓரளவிற்கு சரியாக செய்திருக்கிறார்.
நாயகியான திவ்யா, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொறுப்பான தந்தையாக மனதில் பதிகிறார் நிழல்கள் ரவி.
சிறுவயதில் இருந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன், வளர்ந்த பிறகு படும் கஷ்டங்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராகவன். இதில் காதல், சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்பு இல்லாமல் இருப்பது படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. காமெடி காட்சிகள் பெரியதாக எடுபடவில்லை.
சௌந்தர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். சங்கர்-கணேஷின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘எண்ணம் புது வண்ணம்’ பளிச்சிடவில்லை.