ஜப்பானில் வசித்து வரும் சுகன்யாவின் மகளை பணத்திற்காக ஒரு கும்பல் கடத்தி சென்றுவிடுகிறது. பணம் கேட்டு மிரட்டும் அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்து எப்படியாவது மீட்க சுகன்யா முயற்சி செய்து வருகிறார்.
இதேவேளையில், தனது ஊருக்கு மேஜிக் செய்ய வரும் யோக் ஜேப்பியின் மேஜிக்கில் மயங்கி, அவரிடம் உதவியாளராக சேர்கிறார் நாயகன் கோகுல்நாத். இந்நிலையில், யோக் ஜேப்பி, ஜப்பானில் நடைபெறும் மேஜிக் நிகழ்ச்சிக்காக தனது குழுவில் உள்ள அஞ்சனா கீர்த்தி, கும்கி அஸ்வின், லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ் ஆகியோருடன் ஜப்பானுக்கு பயணமாகிறார். போன இடத்தில் யோக் ஜேப்பிக்கு மாரடைப்பு ஏற்படவே, வேறு வழியின்றி கோகுல்நாத் அந்த மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
கோகுலின் மேஜிக் நிகழ்ச்சி அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிடித்துப் போய்விடுகிறது. குறிப்பாக, ஜப்பானில் மிகப்பெரிய தாதாவான ஒக்கிடாவுக்கு பிடித்துப்போகவே, கோகுலை வேறொரு மேஜிக் நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம் செய்கிறார். இதனால், கோகுல் மற்றும் அவரது குழுவில் உள்ள அனைவரும் ஜப்பானில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இந்நிலையில், கோகுல்நாத்தின் குழுவை சேர்ந்த அனைவரும் ஜப்பானை சுற்றிப்பார்க்க செல்கிறார்கள். அப்போது, கோகுல்நாத்தும், அஞ்சனா கீர்த்தி தங்களது குழுவை தவறவிடுகிறார்கள். இருவரும் தங்களது குழுவை தேடிச் செல்லும்போது இருவரும் நெருங்கி பழகி காதலர்களாகிறார்கள்.
அதேநேரத்தில், மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சுகன்யாவின் மகளை அந்த கும்பலிடமிருந்து மீட்கிறார் கோகுல். பின்னர், அந்த குழந்தையை சுகன்யாவிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார். ஆனால், இவர் செய்யும் எல்லா முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது.
இறுதியில், அந்த குழந்தையை கோகுல் சுகன்யாவிடம் ஒப்படைத்தாரா? தனது குழுவை தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகனான கோகுல்நாத் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும்படியான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். படத்தில் இவர் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான காட்சிகள் நிறைய இருக்கிறது. அதை மிகவும் நன்றாகவே செய்திருக்கிறார்.
நாயகி அஞ்சனா கீர்த்தி, படம் முழுக்க நாயகனுடனே வலம்வந்தாலும், இவருடைய கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு இல்லை. சுகன்யாவுக்கு தனது மகளை பிரிந்து வாடும் கதாபாத்திரம். ஆனால், அதற்குண்டான எந்த உணர்ச்சியும் இவர் வெளிப்படுத்துவதற்கான காட்சிகளை இயக்குனர் ஏன் வைக்காமல் போனார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
‘கும்கி’ அஸ்வின், ஈரோடு மகேஷ், ‘லொள்ளு சபா’ ஜீவா என நகைச்சுவைக்கு நிறைய பேர் இருந்தாலும், படத்தில் நகைச்சுவை மிகவும் குறைவே. குறிப்பாக, மகேஷ் ஜப்பான் தாதாவிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் காட்சிகளை நகைச்சுவையாக எடுத்திருந்தாலும், திரையில் பார்க்கும்போது பெரிதாக எடுபடவில்லை.
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட படம். மேஜிக் காட்சிகள், ஜப்பானின் அழகு எல்லாவற்றையும் 3 டியில் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது. குறிப்பாக, யோக் ஜேப்பி செய்யும் மாயாஜால வித்தையில், சிங்கம் நடந்து வருகிற மாதிரி காட்சியை 3டியில் பார்க்கும்போது வியப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.
சதீஷ் ஒளிப்பதிவு ஜப்பானை அழகாக படம்பிடித்திருக்கிறது. ஸ்ரீவித்யா கலையின் பின்னிண இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘ஜம்புலிங்கம்’ ஜாலி லிங்கம்.