படத்தின் ஆரம்பத்திலேயே உள்துறை மந்திரியான இளவரசுவுக்கு முதல்வர் பிரகாஷ் ராஜை யாரோ கடத்திவிட்டார்கள் என்று போன் வருகிறது. உடனே, பரபரப்பாகும் அவர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து முதல்வரை மீட்க உத்தரவிடுகிறார். ஜான் விஜய் தலைமையில் முதல்வரை மீட்க போலீஸ் குழு புறப்படுகிறது.
முதல்வரை கடத்திய சம்பவம் மீடியா மூலமாக பொதுமக்களுக்கு தெரிய வந்ததும், நகரத்தில் பெரும் கலவரம் வெடிக்கிறது. பத்திரிகையாளரான பாபி சிம்ஹாதான் பிரகாஷ் ராஜை துப்பாக்கி முனையில் கடத்தி வைத்திருக்கிறார். ஆனால், அவர்தான் கடத்தி வைத்திருக்கிறார் என்பது போலீசாருக்கு தெரியவில்லை. அவர் எதற்காக பிரகாஷ் ராஜை கடத்தி வைத்திருக்கிறார்? பாபி சிம்ஹாவின் பின்புலம் என்பதே ‘கோ2’ படத்தின் மீதிக்கதை.
பாபி சிம்ஹா தனது வழக்கமான படங்களைப் போலவே இந்த படத்திலும் நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜூடன் இவர் பேசும் வசனங்களை உச்சரிக்கும் விதத்தில் கவர்கிறார். நாயகியுடன் டூயட் பாடும் காட்சிகளில் எல்லாம் பெரிதாக இவருக்கு ரொமான்ஸ் வரவில்லை.
நாயகி நிக்கி கல்ராணிக்கு படத்தில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாவிட்டாலும், கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். சமூக சேவகராக வரும் நாசர் ஒரே காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார். மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் கருணாகரனின் நடிப்பு பிரமாதம். முதல்வராக வரும் பிரகாஷ் ராஜ் படம் முழுக்க வருகிறார். தனது அனுபவ நடிப்பால் ரசிகர்களை எளிதாக கவர்கிறார். இளவரசுக்கு இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்து ரசிக்க வைக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து கைதட்டல் பெறுகிறார். பாலசரவணனுக்கும் இப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம். இதுவரையிலான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர், இப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாகவும் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
இயக்குனர் சரத் பழிவாங்கும் கதையை வித்தியாசமான கோணத்தில் படமாக்க நினைத்திருக்கிறார். அதற்காக அவர் இயக்கிய விதமும் வித்தியாசமாகவே இருக்கிறது. இப்படத்தின் முதல் பாகமான ‘கோ’ படத்தை மனதில் வைத்து பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சம்.
பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் பேசும் வசனங்கள் எல்லாம் இன்றைய அரசியல் நிலவரங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கிறது. இந்த காட்சி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும். இருந்தாலும், இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு முதல் பாதியில் இல்லை என்பது வருத்தம்தான். கிளைமாக்ஸ் காட்சியை திருப்திகரமாக அமைத்தது படத்திற்கு முழு நிறைவை தருகிறது.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிலிம் ஆர் சுந்தரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கோ-2’ கோட்டையை பிடிக்கும்.