சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய நேரம் முதல் பல்வேறு நடிகர், நடிகைகளும் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். அஜித், ரஜினி ஆகியோர் காலையிலேயே முதல் ஆளாக வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
மேலும், பல நடிகர், நடிகையரும் தங்களது வாக்கை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்ய நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு காலை 10.45 மணிக்கு வருகை தந்தார். அவரை பார்ப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்தது.
போலீசார் அவரை பத்திரமாக வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் தனது ஆவணங்களை அலுவலர்களிடம் ஒப்படைத்து, தனது வாக்கை பதிவு செய்ய வாக்கு எந்திரத்திற்கு முன் வந்தார். சில நிமிடம் யோசித்த அவர் பின்னர், தனது வாக்கை பதிவு செய்தார்.
அங்கிருந்து புறப்படும்போதும் ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்துகொண்டனர். பின்னர், அவரை பாதுகாவலர்களும், போலீசாரும் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.