பிரான்சு நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச படவிழா மிகவும் பிரபலமானது. இதில் முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆண்டு தோறும் தவறாமல் பங்கேற்று வருகிறார்.
வித்தியாசமான உடை அணிந்து அவர் வருவதை கண்டு ரசிக்கவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழா கடந்த 11–ந் தேதி தொடங்கியது. இதில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டார்.
அவருடைய தோற்றம் பற்றி கருத்து சொன்ன சிலர் ஐஸ்வர்யா ராயின் தோற்றப் பொலிவு குறைந்து விட்டது என்று கூறினார்கள். இது பற்றி ஐஸ்வர்யா ராயிடம் கேட்ட போது….
“கேன்ஸ் படவிழாவில் நான் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பங்கு பெற்று வருகிறேன். பல்வேறு பேஷன் ஷோகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். எனது அழகு முன்புபோல பொலிவுடன் இல்லை என்று கூறப்படுவது பற்றி நான் கவலைப்படவில்லை.
இதனால் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. நான் சாதாரண இந்திய பாணி உடைகளை அணிந்து நடிக்கிறேன். நடிப்பை தேர்ந்து எடுத்து இருந்தாலும் பேஷனிலும் ஆர்வம் காட்டுகிறேன். எனக்கென்று தனியான வாழ்க்கை, குடும்பம் இருக்கிறது.
எல்லா நேரத்திலும் பேஷனில் நான் முழு கவனம் செலுத்த முடியாது. இப்போது நான் நடிக்கு ‘சரப்ஜித்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.