தமிழ் சினிமா நடிகை நமீதா சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். பின்னர், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்கும் சேகரித்தார். இந்நிலையில், நேற்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குகளின் எண்ணிக்கை முடிவில் அதிமுக அதிக இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பெற்ற ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.
மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள்.
இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார். முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.
இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில் அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.