ராஜபாளையம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் விஷால். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவரை அப்பத்தாவான கொள்ளப்புள்ளி லீலாதான் வளர்த்து வருகிறார். இவருடைய நண்பரான சூரியும், இவருடனே வளர்ந்து வருகிறார். அப்பத்தாவை சாமியாகவே மதிக்கும் விஷால், அவர்மீது மிகுந்த அன்பும், அவர் பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாத செல்லப்பிள்ளையாக இருக்கிறார்.
இந்நிலையில், ஒருநாள் கடையில் இருக்கும்போது, அங்கு வரும் ஸ்ரீதிவ்யா மீது தவறுதலாக விஷாலின் கைபடவே, ஸ்ரீதிவ்யா விஷாலை கன்னத்தில் அறைந்து விடுகிறார். கோபமடைந்த அப்பத்தா, ஸ்ரீதிவ்யாவை பதிலுக்கு அறைகிறார். இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.
இருப்பினும், ஸ்ரீதிவ்யாவின் துணிச்சல் அப்பத்தாவுக்கு பிடித்துப்போக தன் பேரனுக்கு அவள் பொருத்தமாக இருப்பாள் என்று சூரியிடம், விஷாலை எப்படியாவது ஸ்ரீதிவ்யாவை காதலித்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி கூறுகிறார். சூரி, விஷாலையும், ஸ்ரீதிவ்யாவையும் சேர்த்து வைக்க பல முயற்சி செய்து, ஒருவழியாக இரண்டு பேரையும் காதலிக்க வைக்கிறார்.
இந்நிலையில், ராஜபாளையம் பகுதியில் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து வரும் ராதாரவியின், வலதுகையாக செயல்பட்டு வரும் ஆர்.கே.சுரேஷ், எம்.எல்.ஏ. ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். இதற்கிடையில், அந்த பகுதியில் நடக்கும் கொலைகளுக்கு சுரேஷ்தான் காரணம் என்று ஸ்ரீதிவ்யாவின் அப்பா மாரிமுத்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால் தனது எம்.எல்.ஏ. கனவு பலிக்காமல் போய்விடும் என்பதால், ஆர்.கே.சுரேஷ் மாரிமுத்துவிடம் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார். ஆனால், மாரிமுத்துவோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் மாரிமுத்துவை கொலை செய்ய ஆர்.கே.சுரேஷ் முடிவெடுக்கிறார்.
இந்த விஷயம் விஷாலுக்கு தெரிய வந்ததும் ஸ்ரீதிவ்யாவுக்காக ஆர்.கே.சுரேஷை எதிர்க்க புறப்படுகிறார். இறுதியில், ஆர்.கே.சுரேஷை எதிர்த்து ஸ்ரீதிவ்யாவையும் அவளது அப்பாவையும் விஷால் காப்பாற்றினாரா? ஊரே எதிர்க்க பயப்படும் ஆர்.கே.சுரேஷை ஸ்ரீதிவ்யாவின் அப்பா மட்டும் எதிர்க்க காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.
விஷால், கறுப்பு தோலும், தொடை தெரியும் அளவுக்கு கைலி உடுத்தி, ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளிக்குண்டான உடல்வாகுடன் காட்சியளிக்கிறார். இவர் அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், அப்பத்தா மீது பாசம் காட்டும் பேரனாகவும், பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் இளைஞனாகவும், வில்லனை எதிர்க்கும் விதத்தில் சீறிப் பாயும் புலியாகவும் நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.
ஸ்ரீதிவ்யா கிராமத்து பெண்ணாக மனதில் பதிகிறார். இவருக்கு படத்தில் பெரிதாக வசனங்கள் இல்லாவிட்டாலும், துணிச்சலான பெண்ணாக நடித்து அசர வைக்கிறார். விஷாலின் உயரத்துக்கு ஸ்ரீதிவ்யா பொருத்தமாக இருப்பாரா? என்று யோசித்தாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறார்.
சூரி, வழக்கமான காமெடியில் கலக்கியிருந்தாலும், இதில் குணச்சித்திர கதாபாத்திரத்தை கலந்து நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக, இறுதிக் காட்சியில் அப்பத்தாவுக்காக இவர் கதறி அழும் காட்சிகள் எல்லாம் சிறப்பு. மென்மையான வில்லனாக வரும் ராதாரவி நடிப்பில் மிரள வைக்கிறார். அவருடைய முடி ஸ்டைல், முகத்தோற்றம் என அனைத்தும் கவரும் படியாக இருக்கிறது.
ஆர்.கே.சுரேஷ் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். அந்தளவுக்கு வில்லத்தனத்தில் அனைவரையும் மிரட்டியிருக்கிறார். படத்தில் பல காட்சிகளில் விஷாலை மிஞ்சும் வசனங்களையும், நடிப்பையும் பதிவு செய்திருக்கிறார். அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை லீலா, நம்ம வீட்டிலும் இப்படி ஒரு அப்பத்தா இருந்தால் எப்படி இருக்கும்? என்ற உணர்வை கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினைவிட முக்கியமான கதாபாத்திரம் இவருடையது. படம் முழுக்க இவருடைய கதாபாத்திரமே ஓங்கியிருக்கிறது. அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இறுதிக்காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.
‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ போன்ற மண் சார்ந்த படங்களை உணர்ச்சிப்பூர்வமாக கொடுத்த முத்தையாவின் படைப்பில் வெளிவந்துள்ள படம்தான் இந்த ‘மருது’. ஒரு சாதாரண மூட்டை தூக்கும் தொழிலாளியை மையப்படுத்தி இந்த படைப்பை உருவாக்கியிருக்கிறார். முத்தையாவின் முந்தைய படங்களில் அவரது வசனம்தான் படத்தின் ஹீரோ. அதேபோல், இந்த படத்திலும் வசனங்கள்தான் படத்தின் முதல் ஹீரோ. அதேபோல், அந்த வசனங்களை அதற்கேற்ற கதாபாத்திரங்கள் பேசும்போது நமக்கே ஒருவித உணர்ச்சி பெருக்கெடுக்கிறது. விஷாலை ஆர்.கே.சுரேஷ் ஓரங்கட்டிவிடுவாரோ என்ற பயம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டாலும், யாருக்கும் பாதகம் ஏற்பட்டு விடாதவாறு சரிசமமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
இமானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். ‘சூறாவளிடா….’ ‘அக்கா பெத்த ஜக்கா வண்டி’ ஆகிய பாடல்கள் தியேட்டரில் துள்ளி ஆட வைக்கிறது. ‘கருவக்காடு கருவாயா’ பாடல் அழகான மெலோடி ரகம். பின்னணி இசையிலும் தன் பங்குக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவு. ராஜபாளையத்தின் வாழ்வியலை இவரது கேமரா அழகாக நம் முன் காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளில் இவரது கேமரா சுழன்று வேலை பார்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மருது’ வெற்றி பெறுவான்.