தென் அமெரிக்காவில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் இளைஞர் ஒருவர் சிங்கத்தின் குகைக்குள் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்த இரண்டு சிங்கங்களை காவலர்கள் சுட்டுக் கொன்று அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் சாண்டியோகோ நகரில் வன விலங்கு காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான ஆப்பிரிக்க சிங்கங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகளைப் பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இங்கு வருவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று இந்த காப்பகத்திற்கு வந்த பார்வையாளர்களில் ஒரு இளைஞர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது ஆடைகளைக் களைந்து விட்டு, நிர்வாணமாக சிங்கங்கள் உலவும் பகுதிக்குள் குதித்தார். இதைக் கண்டு அங்கிருந்த மற்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே இளைஞரை இரையாக்கிக் கொள்ள அங்கிருந்த சிங்கங்கள் அவரை நோக்கி பாய்ந்து வந்தன. பின்னர், அவை இளைஞரை கடித்துக் குதற தொடங்கின.
இதனைக் கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்று, இளைஞரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கினர். ஆனால், சிங்கங்களின் பிடியில் இருந்து இளைஞரைக் காப்பாற்ற இயலவில்லை. இதனால், சிங்கங்களை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதில் இரண்டு சிங்கங்கள் உயிரிழந்தன. மற்ற சிங்கங்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடி மறைந்தன.
பின்னர் பலத்த காயங்களுடன் இருந்த அந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் புகைப்பட தொகுப்பு வீடியோவாக உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது.