நமது சீரியல்கள் போகிற போக்கைப் பார்த்தால், சினிமாவைப் போலவே சீக்கிரம் அவைகளுக்கும் சென்சார் தேவைப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனத் தெரிகிறது.
ஏற்கனவே, தொழில்நுட்ப வளர்ச்சியால் நல்லதைப் போலவே தீயதையும் இளைய சமுதாயம் கற்று வருகிறது என்ற ஆதங்கம் பெற்றோருக்கு உள்ளது. இதில், இத்தகைய சீரியல்கள் மேலும் இளைய சமுதாயத்தை மேலும் சீரழிப்பதாகவே உள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, அத்தகைய சீரியல்கள் சிலவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
சரவணன் மீனாட்சி…
இதில் மீனாட்சியின் அப்பாவாக வருகிற கேரக்டரின் நோக்கம் என்னவென்றே யூகிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சியை காதலித்தபோதும் எதிர்த்தார். பின்னர் வேட்டையன் மீனாட்சி காதலிக்கும் போதும் அதையே செய்தார்.
மீனாட்சியின் நிலை…
இடையில் விபத்தில் சிக்கி பழைய நினைவுகளை இழக்கிறார் மீனாட்சி. தன் மகளின் நிலை கண்டு பரிதாபம் கொள்வதற்கு மாறாக, அவரது காதலை மறக்க இது நல்ல வாய்ப்பு என்றே கருதுகிறார் அவர். பின்னர் எப்படியோ வேட்டையனோடு மீண்டும் காதலில் விழும் மீனாட்சி, அவரையே போராடி கரம் பிடிக்கிறார்.
அப்பாவின் சதி…
பழைய காதலை மறந்து, புதிய காதலோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தும் வருகிறார். ஆனால், இது அவரது அப்பாவின் கண்களை உருத்துகிறது. எப்படியும் மகளின் சந்தோஷத்திற்கு உலை வைப்பதே அவரது நோக்கமாக இருக்கிறது. இதற்காக மகளுக்கே காதல் கடிதம் போடுகிறார். கூடவே சில பரிசுப் பொருட்களையும் அனுப்புகிறார்.
மொட்டைக்கடிதம்…
அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு யாரோ தன்னை வெறித்தனமாக காதலிப்பதாக நினைத்துக் கொள்கிறார் மீனாட்சி. அந்தக் கடிதத்தை எழுதியது தனது அப்பா தான் எனத் தெரியாமல் சகட்டுமேனிக்கு திட்டவும் செய்கிறார்.
தலைமுறை இடைவெளி…
இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது, நீண்டகாலத்திற்கு முன் ஒளிபரப்பான ஒரு விளம்பரம் தான் ஞாபகத்துக்கு வருகிறது. அதில், ‘உன்னோட முதல் எதிரி யார்?’ என ஒரு இளைஞரிடம் கேட்பார்கள். அவர் எதையும் யோசிக்காமல் பட்டென்று என் அப்பா தான் எனப் பதிலளிப்பார். ஏற்கனவே தலைமுறை இடைவெளியால் பெற்றோருக்கு, அதிலும் குறிப்பாக அப்பாவிற்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
குடும்ப உறவுகளுக்குள் சிக்கல்…
இதில், இத்தகைய சீரியல்கள் மூலம் அதை மேலும் அதிகரிக்கவே முயற்சிப்பதாகத் தெரிகிறது. இதனால் தனது கஷ்டங்களை மறைத்துக் கொண்டு குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் அப்பாக்கள் மீது தேவையில்லாமல் பிள்ளைகளுக்கு சந்தேகமே ஏற்படும். அவர்கள் நல்லதே செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் தயங்கும். இதனால் குடும்ப உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏற்படும். இத்தகைய சமுதாய சீரழிவைத் தான் இந்த சீரியல் இயக்குநர்கள் விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை.
வாணி ராணி…
இதேபோல், ராணி வாணியிலும் தன் மருமகளுக்கு குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லை எனத் தெரிந்து கொள்கிறது ஒரு அப்பா கேரக்டர். உடனே தனது தங்கை மகளை சதி செய்து மகனிற்கு இரண்டாவது தாரமாக்கி விடுகிறார்.
இது தேவையா…?
ஏற்கனவே, மருமகள்கள் எங்கே கணவரை தங்களிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் மாமனார், மாமியாரை வெறுக்கும் சூழல் அதிகரித்து, கூட்டுக்குடும்பம் என்ற நிலை மாறி தனிக்குடித்தனங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற காட்சிகள் தேவை தானா இயக்குநர்களே.