பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எம்.பி.க்களின் கேள்விகளுக்கு குடிபோதையில் பதிலளித்த தான்சானியா நாட்டு உள்துறை மந்திரியை அந்நாட்டின் அதிபரான ஜான் மகுஃபுலி பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரியநாடுகளில் ஒன்றான தான்சானியாவின் புதிய அதிபராக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற ஜான் மகுஃபுலி, ஆட்சி மற்றும் அரசுத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
அரசுசார்ந்த ஆடம்பர விழாக்கள் மற்றும் வீண் செலவினங்களை குறைத்ததுடன், லஞ்ச, ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்வதுடன் கடுமையான நடவடிக்கைகளுக்கும், தண்டனைக்கும் அவர் பரிந்துரைக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக சில எம்.பி.க்கள் உள்துறை மந்திரியான சார்லஸ் கிட்வாங்கா-விடம் கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விகளுக்கு சார்லஸ் கிட்வாங்கா குடிபோதையில் பதிலளித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த அதிபர் ஜான் மகுஃபுலி, தான்சானியா நாட்டு உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து சார்லஸ் கிட்வாங்காவை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.