பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம் வருகிற மே-27 ஆம் தேதி வெளிவருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சிம்பு-நயன்தாராவின் காதல் காட்சிகள் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறும்போது, மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலை பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ, ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டென்று உரசி போயிருக்கும்.
சட்டென்று பூக்கும் பூவைப்போல, மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. அந்த காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் ‘இது நம்ம ஆளு’. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம்.
படத்தில் நாயகன் – நாயகியாக நடித்த சிம்பு – நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் சிம்பு – நயன்தாராவின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை; பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும் என்று கூறினார்.