இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் 27 வயதான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் தெண்டுல்கருக்கு நிகராக பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டே இருக்கிறார். தற்போதைய ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 919 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் அவரை வீழ்த்துவது கடினமாக இருக்கலாம். ஆனால் களத்திற்கு வெளியே காதல் வலையில் அவர் சீக்கிரமே சிக்கிவிட்டார். கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் வானில் சிறகடித்து பறந்தது ஊரறிந்த விஷயம். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர்.
அனுஷ்கா, கோலியின் ஆட்டத்தை நேரில் பார்த்து உற்சாகப்படுத்துவது உண்டு. யார் கண் பட்டதோ தெரியவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது காதல் உறவு முறிந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தன. பிறகு மீண்டும் சேர்ந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த சீசனில் ஐ.பி.எல். ஆட்டங்களை பார்க்க அனுஷ்கா சர்மா நேரில் ஒரு முறை கூட வரவில்லை.
இந்த நிலையில் அனுஷ்கா சர்மா, கோலியின் முதல் காதலி அல்ல; அதற்கு முன்பே இன்னொரு காதலி இருந்த சுவாரஸ்யமான விஷயம் இப்போது வெளிவந்துள்ளது. அண்மையில் விராட் கோலி பேட்டி அளித்த போது இது தொடர்பான ஜாலியான ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் ‘அனுஷ்காவை சந்திப்பதற்கு முன்பு பிரபல பாலிவுட் நட்சத்திரம் கரிஷ்மா கபூர் மீது நான் காதல் கொண்டேன். அந்த சமயத்தில் நான் அவரது தீவிர ரசிகன். அவரது படங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவர் மீது பைத்தியமாக இருந்தேன்’ என்று கோலி கூறியுள்ளார்.
கோலியின் சிறு வயது காதலை, இரண்டு குழந்தைகளின் தாயாகி விட்ட 41 வயதான கரிஷ்மா கபூர் இப்போது தெரிந்து, ஆச்சரியப்பட்டு இருப்பார்.