இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் யூஇன் என்ற இடத்தில் சமீபத்தில் 14 வயது பள்ளி சிறுமியை சிலர் கடத்தி சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை கொலை செய்தனர்.
இந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். இதையடுத்து அந்த நாட்டில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி ஜோகோ விடோடா பிறப்பித்துள்ளார். இந்த சட்டம் பாராளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வர உள்ளது.
இதற்கு முன்பு அந்த நாட்டில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு 14 ஆண்டு வரை ஜெயில் தண்டனை வழங்கும் சட்டம் இருந்தது. இப்போது அது மரண தண்டனையாக மாற்றப்பட்டு உள்ளது.