திரையுலகில் 1950, 60 மற்றும் 70-களில் சகாப்தமாக வாழ்ந்தவர், நடிகை சாவித்திரி. தமிழ், தெலுங்கு, இந்தியில் 318 படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து வைத்து இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரங்காராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்து இருந்தார்.
பாசமலர் படத்தில் பாசக்கார தங்கையாகவும், திருவிளையாடலில் சக்தியே பெரிது என்று வாதாடும் ஈசனின் மனைவியாகவும், படித்தால் மட்டும் போதுமா படத்தில் அன்பான மனைவியாகவும் கவர்ந்தார். பாவமன்னிப்பு, நவராத்திரி, கர்ணன், களத்தூர் கண்ணம்மா, பரிசு, கந்தன் கருணை, மாயாபஜார் உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரியின் திறமையான நடிப்பில் வெளிவந்து வசூல் சாதனை படைத்தன.
சிறந்த நடிப்பால் ‘நடிகையர் திலகம்’ என்ற பட்டம் அளித்து பாராட்டப்பட்டார். நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டார். படங்களை டைரக்டும் செய்தார். சென்னையில் மாளிகை போல் வீடு கட்டி அதற்குள் நீச்சல் குளம் அமைத்த முதல் நடிகை இவர்தான். கதாநாயகியாக இருந்தபோது செல்வ செழிப்பில் புகழின் உச்சியில் இருந்த அவர் கடைசி காலத்தில் சினிமா தயாரிப்பில் பணத்தை இழந்து உடல் நலம் குன்றி கஷ்டப்பட்டு இறந்தார்.
சாவித்திரியின் வாழ்க்கை தமிழ், தெலுங்கு மொழிகளில் தற்போது சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் நாக் அஸ்வின் ‘மகாநதி’ என்ற பெயரில் இயக்குகிறார். சாவித்திரி வேடத்தில் நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடக்கிறது.
சாவித்திரி வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து டைரக்டர் நாக் அஸ்வின் கூறும்போது, ‘‘சாவித்திரி ஏழ்மை குடும்பத்தில் பிறந்து நடிகையாகி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவர் வாழ்க்கை மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்தவை. சாவித்திரி மாதிரி ஆக வேண்டும் என்று இப்போதும் பல நடிகைகள் சொல்வதன் மூலம் அவர் திறமையை அறிய முடியும். அவர் வாழ்க்கையை படமாக எடுத்து வெளியிட்டால் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கருதியே அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன்.
கடந்த 6 மாதங்களாக சாவித்திரி சம்பந்தமான புத்தகங்கள் படித்தும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசியும் தகவல்கள் திரட்டி திரைக்கதை அமைத்து இருக்கிறேன். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்’’ என்றார்.