பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள பாடல் ஆசிரியர் காளிதாசன் மரணம் அடைந்தார்.
‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில், ‘‘தண்ணி குடம் எடுத்து…’’ என்ற பாடலையும், ‘நட்புக்காக’ படத்தில், ‘‘மீசைக்கார நண்பா…’’ என்ற பாடலையும் எழுதியவர், காளிதாசன். ‘தாலாட்டு,’ ‘சட்டம் என் கையில்,’ ‘கரிமேடு கருவாயன்’ ஆகிய படங்களுக்கும் இவர் பாடல்கள் எழுதியிருந்தார்.
இவருக்கு மூளை நரம்பில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, சொந்த ஊரான தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.
அவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், பாலசுப்பிரமணியம் என்ற மகனும் இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியம், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கிறார். எனவே, மரணம் அடைந்த காளிதாசனின் உடல் தஞ்சையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. மூல கொத்தளம் சுடுகாட்டில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.