திரைப்பட நடன இயக்குனர் கே.சிவசங்கர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் சினிமா துறையில் 41 ஆண்டுகளாக டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுகிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடன இயக்குநராக இருந்துள்ளேன்.
‘மன்மதா ராசா…’ பாடலுக்கு நான் தான் நடனம் அமைத்தேன். இப்படி, சினிமா துறையில் புகழின் உச்சியில் இருக்கும் என் மீது எனது மருமகள் ஜோதி களங்கம் சுமத்தி உள்ளார்.
எனது மூத்த மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும், பெங்களூரை சேர்ந்த ஜோதிக்கும் 2013-ம் ஆண்டில் திருமணம் செய்து வைத்தேன். அப்போது ஜோதி குடும்பத்தினரிடம் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை.
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே விஜய் கிருஷ்ணாவுக்கும், ஜோதிக்கும் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி சண்டை போட்டனர். இதனால் அவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து தனி குடித்தனம் வைத்தேன். அங்கும் குடும்பத்தகராறு தொடர்ந்தது.
எனது மகன் விஜய் கிருஷ்ணா திடீரென்று மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என் வீட்டுக்கு வந்து விட்டார். ‘‘ஜோதி என்னை கொடுமைப்படுத்துகிறார். அவருடன் சேர்ந்து வாழ முடியாது’’ என்று எங்களிடம் கூறினார். இருவருக்கும் சமரசம் செய்து சேர்த்து வைக்க முயன்றோம். ஆனால் ஜோதி என் மகனுடன் வாழ முடியாது என்று கூறிவிட்டார்.
தற்போது எனது வீட்டில் வந்து தர்ணா செய்கிறார். வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தியதாகவும், திராவகம் வீசி கொல்ல முயன்றதாகவும் எங்கள் மீது போலீசில் பொய் புகார் அளித்துள்ளார். எங்களை கைது செய்ய போலீஸ் தேடியதால் சில நாட்கள் தலைமறைவாக இருந்துவிட்டு வந்தோம்.
ஜோதி சொன்னது அனைத்தும் பொய் புகார்கள். அவரை நாங்கள் துன்புறுத்தவில்லை. எங்களிடம் இருந்து ரூ.10 கோடியும், நான் சம்பாதித்து கட்டிய வீட்டையும் கேட்டு ஜோதியும், அவரது குடும்பத்தினரும் எங்களை மிரட்டுகிறார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு எங்களை காப்பாற்ற வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தோடு நாங்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
எனது மகன் விஜய் கிருஷ்ணா இப்போதும் ஜோதியுடன் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.