இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் வீராட் கோலி. டெஸ்ட் அணி தலைவராக உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அவரது தலைமையிலான பெங்களூர் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. மேலும் அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கான (973 ஓட்டங்கள்) விருதையும் பெற்றார்.
இந்த நிலையில் வீராட்கோலி ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தலைவர் பதவிக்கு தயாராகி விட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி என அனைத்து நிலை கிரிக்கெட்டுக்கும் தலைவராக கோலி தயாராகிவிட்டார். நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் இது போன்று தான் சிந்திப்பேன்.
இதுதான் சிந்திக்க வேண்டிய நேரம். ஏனென்றால் 2019–ம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு உள்ள 3 ஆண்டில் பெரிய போட்டி தொடர் எதுவும் இல்லை. டோனி ஒரு வீரராக செயல்பட வேண்டும். அவர் அனுபவித்து விளையாடி வருகிறார். அவர் முடிவு எடுக்க நாம் விட்டுவிட வேண்டும் என்றார்.