தான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகர் செந்தில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் செந்தில் அதிமுக கட்சிக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
தேர்தல் பிரசாரத்தில் செந்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது. இதனைக் கேட்டு பலரும் அவரைத் தொடர்பு கொண்டபோது இது வதந்தி எனத் தெரிய வந்தது. இந்நிலையில் மீண்டும் இதுபோல ஒரு வதந்தியை வாட்ஸ் ஆப்பில் பரப்புவதாக செந்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் ”இதுபோல நான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவினர் தான் இதுபோல செய்கின்றனர். நல்ல குடும்பத்தில் பிறந்த யாரும் இதுபோல செய்ய மாட்டார்கள். அதனால் நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன் இவ்வாறு செய்யாதீர்கள். முதல்முறை பொறுத்துப் பார்த்தோம். ஆனால் மீண்டும், அவர்கள் இவ்வாறு செய்வதால் புகார் கொடுக்க வேண்டியதாயிற்று” என்று கூறியிருக்கிறார்.