மதுரை-ராமநாதபுரம் யுனைடெட் சினிமா வினியோகஸ்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தலைவர் செல்வின்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் பிரபாகரன், பொருளாளர் முத்தையா ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் திரைப்படங்களின் விலை மிக அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான பெரிய படங்கள் வசூல் வினியோகஸ்தர்களுக்கு லாபமாக இல்லை. அவர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் ஆகியோர் தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். நமது ஏரியாவில் திரையரங்குகளில் நுழைவு கட்டணம் குறைவாக உள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக ஏற்கனவே கொடுத்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் கேட்டு கொள்ளப்படுகிறது.
ரூ.50 லட்சத்திற்கு மேல் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை, படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டும். படம் வெளிவந்து வெற்றி பெற்று லாபம் கிடைத்தால் அந்த 25 சதவீதம் வழங்க வேண்டும்.
படம் தோல்வி அடைந்து நட்டம் ஏற்பட்டால் சம்பள பணத்தை வினியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றவர்களுக்கு சதவீத அடிப்படையில் அந்த பணத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இணை செயலாளர் தாமஸ் நன்றி கூறினார். இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.