டெய்லர் கடை நடத்தி வரும் விஷ்ணு விஷால், எம்.எல்.ஏ ரோபோ சங்கருக்கு வலது கையாகவும் இருந்து வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு நண்பராக சூரி. இதே ஊரில் வசிக்கும் நிக்கி கல்ராணி, போலீசாக வேண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரின் முயற்சியை கண்டு இவரை காதலித்து வருகிறார் விஷ்ணு விஷால்.
விஷ்ணு விஷால் எம்.எல்.ஏ.விடம் இருப்பதால் நிக்கி கல்ராணியின் அப்பா அவரிடம் பத்து லட்சம் கொடுத்து போலீசாக்க வேண்டும் என்று கூறுகிறார். விஷ்ணுவும் தன்னுடைய காதலிக்காக பத்து லட்சத்தை வாங்கி ரோபோ சங்கரிடம் கொடுக்கிறார்.
ரோபோ சங்கர் கட்சியின் அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகின்றது. சாகும் நிலையில் இருக்கும் அமைச்சர் ரோபோ சங்கரை அழைத்து 500 கோடி ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு இறக்கிறார். அந்த 500 கோடியை அபகரிக்க, அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா திட்டம் போடுகிறார்.
இந்நிலையில், ரோபோ சங்கருக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார். மறுபக்கம் நிக்கி கல்ராணி சொந்த முயற்சியால் போலீசாகி விடுகிறார். தனக்கு தெரியாமல் பணம் கொடுத்ததால் விஷ்ணு விஷாலிடம் பத்து லட்சம் பணத்தை திரும்ப கேட்கிறார்.
இறுதியில் ரோபா சங்கர் கோமா நிலையில் இருந்து மீண்டாரா? இவரிடம் இருந்து பத்து லட்சம் பணத்தை திரும்ப வாங்கி, விஷ்ணு விஷால் தன் காதலில் ஒன்று சேர்ந்தாரா? அந்த 500 கோடி எங்கு இருக்கிறது என்று ரவிமரியா கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், முதல் முறையாக முழு நேர காமெடி படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இப்படம் மூலம் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். மேலும் படத்தில் சூரிக்கும், ரோபா சங்கருக்கும் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி ஆக்ஷன் கலந்த போலீசாக நடித்திருக்கிறார். போலீஸ் உடையிலும், மற்ற உடையிலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருக்கிறார்.
பரோட்டா சூரி என்று பெயர் பெற்ற சூரியை இனிமேல் புஷ்பா புருஷன் என்றே அழைக்கலாம். அந்தளவிற்கு இப்படம் அவருக்கு பெயர் வாங்கி தந்திருக்கிறது. ஒரு மோதிரத்திற்காக திருமணம் செய்துக் கொண்டு படம் முழுவதும் புஷ்பா புருஷன், புஷ்பா புருஷன் என்று மற்றவர்களிடம் அவதிப்படுவது ரசிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ சங்கர் சொல்லும் கதை திரையரங்கில் சிரிப்பு சரவெடி. இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஆடுகளம் நரேன், ரவிமரியா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
காமெடி படத்தை கொடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குனர் எழில், இந்த படத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்குமளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியை அதிகம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு அதிகம் கை கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ காமெடி சரவெடி.