சில கதாநாயகிகள் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகிறார்கள். பிரியாமணியும், சமந்தாவும் தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.
பிரியாமணி தொழில் அதிபரை மணக்கிறார். இவரது திருமண நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடந்தது. சமந்தா இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்து உள்ளார்.
ஆனால் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா உள்ளிட்ட சில கதாநாயகிகள் 30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போட்டுக் கொண்டு வருகிறார்கள். இவர்களிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தால், பிடித்த மாப்பிள்ளை இன்னும் கிடைக்கவில்லை, திருமணத்துக்கான நேரம் வரவில்லை என்றெல்லாம் காரணங்கள் சொல்லி நழுவுகிறார்கள்.
நயன்தாராவுக்கு 31 வயது ஆகிறது. இவரது இரண்டு காதல்களும் தோல்வியில் முடிந்தன. முதலில் சிம்புவை காதலித்து பிறகு அவருடன் சண்டை போட்டு பிரிந்தார். பின்னர் பிரபுதேவாவுடன் நெருக்கமாகி அவரை மணப்பதற்காக மதமும் மாறி சினிமாவுக்கு முழுக்கு போடவும் தயாரானார். அந்த காதலும் முறிந்து இப்போது முழு நேரமும் சினிமாவே கதி என்று இருக்கிறார். டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் மூன்றாவது காதல் துளிர்த்துள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன.
அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி என்று சவாலான வேடங்களில் நடித்து சினிமாவின் உச்சத்தை தொட்டுவிட்டார். கடந்த வருடமே திருமணத்துக்கு அவர் தயாராகிவிட்டதாக தகவல்கள் வந்தன. இதுபற்றி கேட்டால் சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டி உள்ளது. திருமணத்துக்கு இன்னும் நேரம் வரவில்லை என்கிறார்.
காஜல் அகர்வாலுக்கு 30 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா அகவர்வாலுக்கு இரண்டு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. அடுத்து காஜலுக்குத்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் திருமணத்துக்கு இப்போது அவசரம் இல்லை. இன்னும் காலம் இருக்கிறது என்று சொல்லி விட்டு ஒதுங்குகிறார்.
திரிஷாவுக்கு 33 வயது. இவருக்கும் பட அதிபர் வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள். ஆனால் கடைசி நேரம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.
திரிஷா இப்போது சினிமாவில் மீண்டும் ‘பிஸி’யாகிவிட்டார். திருமணம் என்பது சொந்த விஷயம். அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று சொல்லி விட்டு அவரும் ஒதுங்குகிறார்.
தமிழ், தெலுங்கு படங்களில் ஓஹோ என்று இருந்த ஸ்ரேயாவுக்கு இப்போது படங்கள் இல்லை. 33 வயதாகும் அவரிடம் எப்போது உங்கள் திருமணம் என்று கேட்டால் நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்கிறார்.
திருமணம் செய்து கொண்டாலோ, அல்லது அதுபற்றி பேசினாலோ படவாய்ப்புகள் குறைந்து சினிமா வாழ்க்கை பாதித்து விடும் என்று பயந்தே அதனை இவர்கள் தவிர்க்கிறார்கள். தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை முடித்து தருவது வரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டுத்தான் இவர்களை ஒப்பந்தம் செய்கிறார்கள்.
ஆனால் இந்த நடிகைகளின் பெற்றோர்கள்தான் மகள்களுக்கு திருமண வயது தாண்டுகிறதே என்ற தவிப்பில் இருக்கிறார்கள்.