புதுச்சேரியில் முதல்முறையாக பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பதவியேற்கும் நிகழ்ச்சி, காந்தி திடல் பகுதியில் நடைபெற்றது.
நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறும் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ், ஷாஜகான் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் இன்று பதவியேற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
முன்னதாக தமிழ்நாட்டுடன் சேர்ந்து புதுச்சேரிக்கும் மே 16 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 30 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க. இரண்டு இடங்களைக் கைப்பற்றியது.
ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
இந்த சமயத்தில் தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத வி.நாராயணசாமியை காங்கிரஸ் கட்சி முதல்வர் பொறுப்புக்கு தேர்வு செய்து அறிவித்திருந்ததது.
தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இன்று வி.நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.