காலம் காலமாக சிற்பத் தொழில் செய்து வரும் ராதாரவிக்கு எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா என்ற இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனான எஸ்.ஜே.சூர்யா சினிமாக இயக்குனர். இவர் ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தயாரிப்பாளர் படத்தை வெளியிடாமல் இருக்கிறார்.
இதனால் விரக்தியில் எப்போதும் மது குடித்துக் கொண்டே இருக்கிறார். அவரை நினைத்து அவரது மனைவியான கமாலினி முகர்ஜி மிகவும் வருந்துகிறார். எனவே, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிட இவர்கள் குடும்பம் முயற்சி செய்து வருகிறது.
மறுபக்கம் இவர்கள் குடும்பத்துடன் வளர்ந்த விஜய் சேதுபதி, கணவனை இழந்த பூஜா மீது காதல் வயப்படுகிறார். ஆனால் பூஜாவோ, விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதனால் விஜய் சேதுபதி அஞ்சலியை திருமணம் செய்துக் கொள்கிறார். அஞ்சலியுடன் நெருக்கமாக வாழ்ந்தாலும் பூஜாவின் நினைவாகவே இருக்கிறார்.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கும், தயாரிப்பாளருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் விஜய் சேதுபதி நுழைந்து தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அதேசமயம், அஞ்சலிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் கணவன் அருகில் இல்லாத குறை அஞ்சலியை வாட்டுகிறது.
இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவின் போக்கில் மாற்றம் ஏற்படாததால் அவரது மனைவி கமாலினி முகர்ஜி, அவரை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.
இதுபோன்ற இறுக்கமான சூழ்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் குடும்பத்தில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.
எஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான நடிப்பு இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடிக்கு அடிமையாக கதாபாத்திரத்தை ஏற்றிருந்தாலும், இறுதிக் காட்சியில் கண்களை குளமாக்குகிறார்.
தாடி, கண்ணாடியுடன் முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கே உரிய பாணியில் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் தான் செய்த தவறை நினைத்தும் மனைவியை நினைத்தும் வருந்தும் காட்சியில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாபி சிம்ஹா வில்லத்தனம் கலந்த கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார்.
மேக்கப் இல்லாமல் ஒரு ஏழ்மையான குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் அஞ்சலி. தன் கணவரை நினைத்து வருந்தும் காட்சியில் கமாலினி முகர்ஜி ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று துணிச்சலுடன் நடித்திருக்கிறார் பூஜா திவாரியா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான ராதாரவி, வடிவுகரசி, கருணாகரன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
குடும்பத்தைப் பற்றி சிந்திக்காத ஆண்களால், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் நீளத்தை குறைத்து சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் பேசப்படுமளவிற்கு கொடுத்திருக்கிறார். சிவக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். குறிப்பாக மழை காட்சிகளை சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘இறைவி’ சமூக அக்கறை.