மலையூர் கிராமத்தில் ஒரு கும்பல் பதுக்கி வைத்திருந்த பணத்தை ராமு மற்றும் எடின் அலெக்சாண்டர் நண்பர்கள் குழுக்கள் அதை அபகரித்து செல்கின்றனர். அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு திருடிய பணத்தை ஒருவர் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் நண்பர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.
இந்த சண்டை இவர்களுக்குள் வெட்டு குத்து அளவிற்கு போகிறது. இறுதியில் ஏமாந்த பணத்தை மீட்டார்களா? நண்பர்களுக்குள் நடக்கும் சண்டை முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகம். அதனால், அவர்களிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்க்க முடியாது என்றாலும், ஓரளவு நடிப்பை கூட பார்க்க முடியவில்லை. நடிகர்களின் நடிப்பு மிகவும் செயற்கை தனமாக இருக்கிறது. ராமு மற்றும் எடின் அலெக்சாண்டர் மற்றும் நடிகையாக நடித்திருக்கும் தீபிகா ஆகியோர் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
உண்மை கதையை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் சதாம் உசேன். ஆனால் கதை, தொடர்ச்சி இல்லாமல் நகர்கிறது. திரைக்கதையில் தெளிவு இல்லை. படத்தை பார்க்கும் போது குறும்படத்தை பார்ப்பது போல் தோன்றுகிறது. வன்முறை காட்சிகள், அடிதடி காட்சிகளை தேவை இல்லாமல் புகுத்தி இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை குழப்பத்துடன் செல்கிறது. சண்டை காட்சிகளை பார்க்கும் போது காமெடிதான் வருகிறது. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கலாம். வன்முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அதிகளவில் படத்தை ரசிக்க முடியவில்லை.
தினேஷின் ஒளிப்பதிவில் பகல் நேரமும் இருட்டாக தெரிகிறது. ஒளிப்பதிவில் தெளிவில்லாமல் இருக்கிறது. தேவாவின் இசை பெரியதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘கள்ளத்தோணி’ சுவாரஸ்யம் இல்லை.