மிர்ச்சி சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்த படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. ஜீவா நடிப்பில் ’கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பெங்களூரைச் சேர்ந்த நைனா சர்வார் நடித்துள்ளார். இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா என பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, “இங்கே என்னுடைய பொக்கிஷம் என்று சொல்லக்கூடிய தம்பி சிவா வந்திருக்கார்.. இல்லை…இல்லை.. பொக்கிஷம்னு சொல்லக்கூடாது.. ஏற்கனவே ஒருத்தர் ‘நீங்கதாண்ணே எங்க பொக்கிஷம்னு என்கிட்டே சொல்லிட்டே இருப்பார். இப்ப அவர் எங்க இருக்கார்னே தெரியல.அந்தமாதிரி சிவா பாசமான தம்பி.. என்னை எங்க பார்த்தாலும் கட்டிப்பிடிப்பார். முன்பு சிம்பு இப்படித்தான் கட்டிப்பிடிச்சார். இப்ப சிவா தம்பி அதேமாதிரி பாசத்தை வெளிப்படுத்துறார். கடைசிவரை இந்த பாசம் நிலைக்கணும்னு நான் நினைக்கிறேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர்கிட்டே கேட்டேன்.. ஏண்ணே நீங்க என்ன பிசினஸ் பண்றீங்கன்னு.. அதுக்கு அவரு கப்பல் விட்ருக்கேன்னு சொன்னார். படத்துல அவர் பணத்தை தண்ணீரா செலவு பண்ணியிருக்கிறதை பார்க்கும்போது அது உண்மையா இருக்குமோன்னு தான் தோணுது. இந்தப்படத்தோட டைரக்டர் திரைவண்ணன் நம்மகிட்ட வேலை வாங்குறது தெரியாத மாதிரியே நடிக்க வச்சுருவார். ஆனா மானிட்டர்ல பார்க்கும் போது சூப்பரா வந்திருக்கும். ரொம்ப திறமையானவர். அதனால வருங்காலத்துல அவருக்கு நானே ஒரு படம் கொடுக்கலாம்னு இருக்கேன். இந்தப் படத்துல நான் ஒரு கருவா இருக்கணும்னு நினைச்சவர் இந்த படத்தோட தயாரிப்பாளர். அவர்தான் என் ஆபீஸ் தேடிவந்து அண்ணே இந்தப்படத்துல நடிக்கிறீங்கன்னு சொன்னார். அப்படியா படத்தோட பேரு என்னன்னு கேட்டேன்.. ‘சிம்மக்கல் சேகர்’னு சொன்னார். ஏன் தம்பி ‘சிம்மக்கல் சீனு’ன்னு வைங்களேன்னு சொன்னேன்.. சரிண்ணே அப்படியே வச்சுருவோம்னு சொன்னாரு. ஆனா அப்படியே பேர் மாறி, இப்ப ‘அட்ரா மச்சான் விசிலு’ன்னு வச்சுட்டாங்க.
இந்தப்படத்தோட பாடலை கிட்டத்தட்ட பத்து தடவை போடச்சொலி தொடர்ந்து கேட்ருக்கேன்.. அந்த அளவுக்கு ரகுநந்தன் நல்லா மியூசிக் போட்ருக்கார். இந்தப் படத்துலதான் நிறைய சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கு. இந்தப்படம் வந்தால் எனக்கு ஒரு கிரேடு கூடும்னு நினைக்கிறேன். இதுல சுவாரஸ்யமான விஷயம் ஒன்னை சொல்றேன்.. இந்தப்படம் ஆரம்பிச்சப்ப பேப்பர்ல பெரிய சைஸ்ல விளம்பரம் கொடுத்தாங்க.என் படத்தை பெரிசா போட்டு, தம்பி சிவா படத்தை சின்னதா போட்ருந்தாங்க.. ஒருநாள் தயாரிப்பாளர் கோபி போன்ல கூப்பிட்டு, அண்ணே நமக்கு இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல இருந்து லெட்டர் வந்திருக்கு. இத்தனை கோடி கட்டணும்னு சொன்னார். அய்யய்யோ.. என்ன தம்பி நீங்கதான தயாரிப்பாளர்னு பதறிட்டேன். அதாவது இந்தப்படத்தை நான்தான் தயாரிக்கிறேன்னு இன்கம்டாக்ஸ்ல நினைச்சுட்டாங்க. அதுல இருந்து என் போட்டோ பேப்பர்ல வர்றது இல்ல.ஏன் வரலைன்னு எனக்கும் தெரியல.
இந்தப்படம்னு இல்ல, நான் எந்தப் படத்துல நடிச்சாலும் அதை நான் தான் தயாரிக்கிறேன்னு நினைச்சுக்கிறாங்க.. அது உண்மை இல்ல. ஆனா நான் ஜனவரிக்கு மேல படம் எடுக்கத்தான் போறேன். மத்தபடி இந்தப்படம் முழுக்க காமெடி படமா வந்துருக்கு. என்ஜாய் பண்ணி பாருங்க” என அவர் பாணியிலேயே பேசி அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சிவா, “பவர்ஸ்டாரோட பெர்ஃபார்மன்ஸ் பத்திச் சொல்லணும்னா, ஒரு காட்சியில் நடிக்கும்போது எப்படியெல்லாம் ரியாக்சன் கொடுக்கலாம்னு தெரியும். ஆனால் இப்படியெல்லாம் கூட ரியாக்சன் கொடுக்க முடியுமாங்கிறதை பவர்ஸ்டாரை பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அந்த அளவுக்கு புதுசு புதுசா ரியாக்சன் கொடுப்பாரு. யாராவது ஒருத்தர் ஒரு காட்சில பீல் பண்ணி பேசும்போது நாம சாதாரணமா ஒரு ரியாக்சன் கொடுத்தா, அவரு மட்டும் சாட்டைல அடிச்சமாதிரி ஒரு ரியாக்சன் கொடுப்பார் பாருங்க. சான்சே இல்லை. அவருக்குன்னு தனியா ஒரு பாடி லாங்குவேஜ் வச்சிருக்கிறாரு. படத்துல என்னோட பேரு சிம்மக்கல் சேகர். பவர்ஸ்டாரோட தீவிரமான ரசிகனா நடிக்கிறேன்.
படத்துல பவர்ஸ்டாருக்கு 22வது பிறந்தநாள் கொண்டாடுற மாதிரி ஒரு பாடல் இருக்கு.ஆனா இப்ப நேர்ல பார்க்கிறப்ப ஒரு வயசு குறைஞ்ச மாதிரி தெரியுறாரு. ’காதல் தேசம்’ டைம்ல வந்திருந்தாருன்னா அப்பாஸுக்கு செம டஃப் கொடுத்திருப்பாரு. அந்தப்படத்தை இப்ப ரீமேக் பண்ணினா பவர் ஸ்டார் அப்பாஸாகவும் நான் வினீத் கேரக்டர்லயும் நடிக்க ரெடியா இருக்கேன். இந்தப்படத்துல வெறும் காமெடி மட்டும் இல்ல.. ஒரு நடிகரோட ரசிகர்கள் எந்த அளவுக்கு இருக்கணும்னு ஒரு மெசேஜ் சொல்லிருக்கோம்.. இந்தப்படத்துல நான் மதுரைக்காரனா நடிச்சிருக்கேன். நமக்கு சென்னை பாஷைன்னா பட்டையை கிளப்பிருவேன். ஆனா மற்ற ஊரு பாஷை பேசுறதுக்கு இங்கேயே ஹோம் ஒர்க்லாம் பண்ணமாட்டேன்.. மதுரை பாஷை பேசணும்னா அங்க போய் இறங்கி, அந்த ஊரு பையன்கள் பேசுறத பார்த்து, அத அப்படியே பாலோ பண்ணி, டப்பிங்ல வச்சு கரெக்ட் பண்ணிக்குவேன்” என்றார் சிவா.