மத்திய பிரதேசத்தில் உள்ள ஷங்கராசார்யா சாமியாருக்கு 1.30 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பஸ் ஒன்று உள்ளது. இந்த வாகனம் ஷங்கராசார்யா ஜோதிஷ்பீதா, ஸ்வாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சிற்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில போக்குவரத்துத்துறை மந்திரி பூபேந்திர சிங் கேபினட்டுக்கு பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில்தான் சாமியார் பஸ்சிற்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய மத்திய பிரதேச மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
1.35 கோடி ரூபாய் மதிப்பிலான காருக்கு சுமார் 11 லடசம் ரூபாய் சாலை வரி கட்ட வேண்டியதிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் சாமியாருக்கு மத்திய பிரதேச அரசு 11 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வாகனம் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு வாஷிங் அறை, லிப்ட், பெட் போன்ற வசதிகளுடன் 1.30 கோடி ரூபாய்க்கு மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்து ம.பி. மாநில சுகாதாரத்துறை மந்தி நரோட்டம் மிஷ்ரா, கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து விளக்கம் அளித்தார். ஆனால், எவ்வளவு ரூபாய் வரிவிலக்கு அளிக்கப்பட்டது என்பது குறித்து அவர் கூறவில்லை.
ம.பி. எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்த முடிவை எதிர்க்கவில்லை. ஷங்கராசார்யா சாமியாருக்கு வரிவிலக்கு செய்து மரியாதை கொடுத்த முதல் மந்திரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாநில காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.