குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள லஸ்கனா பகுதியில் நாராயண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுவாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் சீருடையான காக்கி நிற அரைக்கால் டிரவுசர், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு தொப்பி அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் சிலையின் ஒரு கையில் தேசியக்கொடியும் இருந்தது.
ஆர்.எஸ்.எஸ். சீருடையில் இருந்த சுவாமி சிலையின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இது பெரும் சர்ச்சைக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறும்போது, ‘கடவுளுக்கு காக்கி அரைக்கால் டிரவுசர் அணிவித்து எதை நிரூபிக்க போகிறீர்கள்? இதை செய்தவர்கள் மீது இரக்கப்படுகிறேன். இன்று நீங்கள் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவிப்பீர்கள், நாளை பா.ஜனதா சீருடையை அணிவிப்பீர்கள். இது போன்ற நடவடிக்கைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’ என்றார்.
கோவில் நிர்வாகத்தினரின் இந்த செயலுக்கு பா.ஜனதாவும் அதிருப்தி வெளியிட்டு உள்ளது. மாநில பா.ஜனதா தலைவர் விஜய் ருபானி இது குறித்து கூறுகையில், ‘இதை பார்த்து உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன். இதை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். இது கண்டிப்பாக நடந்திருக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.
ஆனால் தங்கள் செயலை கோவில் நிர்வாகம் நியாயப்படுத்தி உள்ளது. கோவிலின் சுவாமிஜி விஸ்வபிரகாஷ் இது குறித்து கூறுகையில், ‘நாங்கள் இந்த சுவாமி சிலைக்கு நாள்தோறும் வெவ்வேறு உடைகளை அணிவிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த சீருடையை உள்ளூர் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். எனவே நாங்கள் இதை அணிவித்தோம். ஆனால் இதனால் இவ்வளவு பெரிய சர்ச்சை கிளம்பும் என நினைக்கவில்லை’ என்றார்.