டெல்லியில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 43 தனியார் வைத்தியசாலைக்கு, 1960-1990 ஆண்டுகளுக்கு இடையே சலுகை விலையில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஆனால் அந்த நிபந்தனைகளின்படி நடந்து கொள்ளாததை தொடர்ந்து 5 முன்னணி வைத்தியசாலைக்கு ரூ.600 கோடி அபராதம் விதித்து டெல்லி மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து டெல்லி மாநில அரசின் சுகாதார துறை கூடுதல் இயக்குனர் டொக்டர் ஹேம் பிரகாஷ் கூறுகையில், “ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்படி நடந்துகொள்ளவில்லை என்பதால் 5 வைத்தியசாலைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அவை வழங்கிய பதில்கள் திருப்திகரமாக இல்லை. எனவேதான் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “டெல்லி ஐகோர்ட்டு 2007-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அபராதம் போடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த அபராத தொகையை அந்த ஆஸ்பத்திரிகள் அடுத்த மாதம் 9-ந் திகதிக்குள் செலுத்த வேண்டும், அப்படி செலுத்த தவறினால் அவற்றின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.