சென்னையில் இமான் அண்ணாச்சி நடத்தி வரும் மேன்சனில், பொம்மைகள் விற்கும் நாயகன் நிதின் சத்யா, சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் யோகி பாபு, சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.
நிதின் சத்யாவும் இவர் கடைக்கு எதிரே உள்ள கடையில் வேலை பார்க்கும் ரக்ஷா ராஜுவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள். ரக்ஷா ராஜுவிற்கு ஐந்து அண்ணன்மார்கள். அவர்கள் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என இருந்து வருகின்றனர். இவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு ஜெயித்தால் தான் நிதின் சத்யாவை திருமணம் செய்துகொள்வதாக ரக்ஷா கூறி வருகிறாள்.
இது ஒருபுறமிக்க, இமான் அண்ணாச்சியின் மேன்சனில் தங்கியிருக்கும் நாயகன் உள்பட அனைவரும் அவருக்கு வாடகை தராமல் ஏமாற்றி வருகிறார்கள். இதனால் மேன்சனில் இருப்பவர்களை காலி செய்துவிட்டு, அதை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறார் இமான் அண்ணாச்சி. இதையறிந்த, மேன்சனில் உள்ளவர்கள் அனைவரும் வாடகை கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லி, இமான் அண்ணாச்சியின் முடிவை கைவிட வைக்கிறார்கள்.
இருப்பினும், மேன்சன் வாடகையை வசூலிக்க மயில்சாமியை நியமிக்கிறார் இமான் அண்ணாச்சி. மயில்சாமியை கைக்குள் போட்டுக் கொள்வதற்காக நிதின் சத்யா, சிங்கம் புலி, யோகி பாபு மூன்று பேரும் சேர்ந்து அந்த மேன்சனை சுத்தம் செய்ய வரும் ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். அந்த பெண்ணோ மயில்சாமி குடிக்காமல் இருந்தால் அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு ஊருக்கு சென்றுவிடுகிறாள்.
இதற்கிடையில், மயில்சாமியை மேன்சனில் இருப்பவர்கள் அனைவரும் குடிக்க வைத்துவிடுகிறார்கள். போதையில் மயில்சாமி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போகிறார். இறந்த மயில்சாமி ஆவியாக மாறி நிதின் சத்யா விற்கும் பொம்மைகளுக்குள் புகுந்து, தன்னை குடிக்க வைத்து இறப்பதற்கு காரணமான மேன்சனில் இருப்பவர்கள் அனைவரையும் பயமுறுத்துகிறார்.
இறுதியில் மயில்சாமியின் ஆவியின் பிடியில் இருந்து மேன்சனில் இருப்பவர்கள் தப்பித்தார்களா? நிதின் சத்யா, ரக்ஷாவின் ஐந்து அண்ணன்களை அடித்து திருமணம் செய்து கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நிதின் சத்யா நடித்திருக்கிறார். இவர் நாயகனாக நடித்திருந்தாலும், சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலருக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரக்ஷா ராஜ் பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கான வாய்ப்பு குறைவு என்றாலும், நடிப்பில் நிறைவை கொடுத்திருக்கிறார்.
நகைச்சுவை மையமாக வைத்தே படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் குணசேகரன். பல நகைச்சுவை நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும், படத்தில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. குழந்தைகளை மட்டுமே கவரும் அளவிற்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. காமெடி காட்சிகளை திறமையாக அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகள், பொம்மைகளுக்குள் பேய் இருப்பது போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
சுகுமார் இசையில் கானா பாலா பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. மரண கானா விஜியின் பாடலும் சிறப்பாக உள்ளது. பின்னணியை இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். சுரேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ தாங்கமுடியல.