திரைப்படத்தில் உள்ள காட்சிகளை துண்டிக்கவோ, நீக்கவோ, மாற்றவோ தணிக்கை வாரியத்திற்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘உத்தா பஞ்சாப்’. இந்த படத்தில் ஆலியா பட், கரீனா கபூர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர்.
போதைப்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கருப்பொருளாக கொண்ட இந்த படத்தை அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் தயாரித்து உள்ளனர். இந்த படம் 17ம் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, ‘உத்தா பஞ்சாப்’ படத்தை தணிக்கை செய்த சினிமா தணிக்கை குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. மேலும், 13 இடங்களில் மாற்றம் செய்யுமாறு பரிந்துரை அளித்தது. அத்துடன் படத்தின் தலைப்பில் ‘பஞ்சாப்’ பெயர் இடம்பெறுவதற்கும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கு படக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
இதனிடையே சர்ச்சைக்குரிய உத்தா பஞ்சாப் திரைப்படத்தை வெளியிட சினிமா தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. படத்திற்கு சினிமா தணிக்கை குழு ´ஏ´ சான்றிதழ் வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய 13 காட்சிகளை நீக்கியதால் அனுமதி அளித்துள்ளதாக சினிமா தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உத்தா பஞ்சாப் பட விவகாரம் தொடர்பான விசாரணை மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் ஏதேனும் இருக்கிறதா என்று அறிய படத்தின் கதை வசனம் முழுவதையும் படித்தோம். உத்தா பஞ்சாப் படத்தில் இந்திய இறையாண்மை அல்லது ஒருமைப்பாட்டிற்கு எதிராக எதுவும் இல்லை.
திரைப்பட தணிக்கை வாரியம் சட்டத்தின் படியும், சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படியும் நடக்க வேண்டும். திரைப்படத்தின் கதையை முடிவு செய்ய வேண்டியவர்கள் இயக்குனர்கள் தான்.
படைப்பின் கருத்து தவறாக இல்லாத பட்சத்தில் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. காட்சிகளை வெட்டவோ நீக்கவோ தணிக்கை வாரியத்திற்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, தணிக்கை குழுவின் வேலை சான்றிதழ் வழங்குவதுதான், சென்சார் செய்வது அல்ல என்று நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்தது குறிப்பிடத்தது.