எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி ஆகியோரின் படங்களை இயக்கிய பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இன்று சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவரது உயிர் சென்னையில் இன்று பிரிந்தது. அவருக்கு வயது 85. திருலோகசந்தரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆற்காடு ஆகும்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான ´அன்பே வா´, சிவாஜி கணேசன் நடிப்பில் ´டாக்டர் சிவா´, ´பாரத விலாஸ்´, ´தெய்வமகன்´ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் திருலோகசந்தர். சிவாஜி கணேசனுடன் இணைந்து சுமார் 25 படங்கள் பணியாற்றியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொத்தம் 65 படங்களை இயக்கியுள்ளார்.
‘காக்கும் கரங்கள்’ படம் மூலம், சிவக்குமாரையும், ‘வீரத்திருமகன்’ படத்தின் மூலம் நடிகை சச்சுவையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். 1962-ல் வெளிவந்த ´வீரத்திருமகன்´ இவருடைய முதல் படம். 1987-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ´அன்புள்ள அப்பா´ இவரது கடைசி படம்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, 5 முறை பிலிம் பேர் விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த படங்களுக்கான தேர்வுக் குழுவின் தலைவராகவும் பலமுறை பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருலோகசந்தரின் மறைவுக்கு இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.