பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணி கடந்த மார்ச் மாதம் 6–ந் திகதி தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அவரது மரணம் மலையாள பட உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலாபவன்மணி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியதால் இந்த விவகாரத்தில் பரபரப்பும் ஏற்பட்டது.
பிரேத பரிசோதனை முடிவில் கலாபவன்மணி உடலில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் கலந்ததால் மரணம் நேர்ந்ததாக கூறப்பட்டது. கலாபவன்மணி அருந்திய மது மூலம் இந்த நச்சு பொருள் அவரது ரத்தத்தில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து மது விருந்தில் பங்கேற்ற கலாபவன்மணியின் நண்பர்கள், மலையாள நடிகர்கள், அவரது உதவியாளர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
கலாபவன்மணிக்கு மது பழக்கம் காரணமாக கல்லீரல் பாதிப்பு இருந்தது. இதனால் அவர் பீர் மட்டும் குடித்து வந்ததாக அவரது உதவியாளர்கள் தெரிவித்து இருந்தனர். எனவே பீரில் உயிரை பறிக்கும் அளவுக்கு ரசாயன பொருள் இல்லை என்பதால் யாரோ பீரில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்திருக்கலாம் என்று புகார் எழுந்தது. இந்த கோணத்திலும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் உள்பட உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தற்போது அந்த பரிசோதனை முடிவுகள் திருச்சூர் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
அந்த அறிக்கையில் கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் என்ற ரசாயன பொருள் 45 மில்லி கிராம் அளவுக்கு கலந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் மது அருந்தும்போது இந்த அளவுக்கு மெத்தனால் உடலில் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கலாபவன் மணிக்கு யாரோ பீரில் மெத்தனாலை கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.