மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாளங்குடாவை தாண்டியவுடன் வருகின்ற புதுக்குடியிருப்பு எனும் கிராமத்தில் வசிப்பவர் தான் 102 வயதுடைய கொல்லுப்பாட்டி செம்பாப்போடி செல்லம்மா.
இந்த செல்லம்மாவுக்கு தான் பிறந்த வயது தெரியாதாம், அங்கு நின்றவர்கள் கூறினார்கள் 1914ம் ஆண்டு செல்லம்மா பிறந்திருக்கின்றார் என்று. அதனால் செல்லம்மாவுக்கு 102 வயது இருக்கும் என செல்லம்மாவின் கடைசி மகள் திருமதி.எஸ்.சவுந்தரம் தெரிவித்தார்.
இந்த செல்லம்மா தனது வாழ்நாளில் நான்காவதைத் தாண்டி வெகுவிரைவில் ஐந்தாவது தலை முறையைக் காணப்போகின்றார் என செல்லம்மாவின் பூட்டப்பிள்ளை ஒருவர் தெரிவித்தார்.
செல்லம்மாவுக்கு 12 பிள்ளைகள், 61க்கு மேற்பட்ட பேரப்பிள்ளைகள், 149க்கு மேற்பட்ட பூட்டப் பிள்ளைகள், 26க்கு மேற்ப்பட்ட கொள்ளுப் பிள்ளைகள் இருக்கிறது என செல்லம்மாவின் கடைசி மகள் திருமதி.சவுந்தரம் கணக்கு காட்டினார்.
செல்லம்மாவின் அத்தனை பிள்ளைகளும் மாவட்டத்தையும் தாண்டி பல ஊர்களில் வசிக்கின்றர்களாம் எனத் தெரிவித்தார். ஆச்சி தனக்கு நடந்த திருமண சம்பவத்தை மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து கொண்டார்.
எனக்கு 13 வயதில் கல்யாணம் நடந்தது. அது ஒரு பெரிய கதை. நான் ஆறாம் வகுப்பு வரதான் படிச்ச நான். ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் என்ன அம்மாட தங்கச்சிட வீட்ட விட்டுட்டு போரதவுவு காளியம்மன் கோயிலுக்கு போயித்தாங்க.
அந்த நேரம் பாத்து மாமாட மகன் வீட்ட வந்து என்னத் தூக்கித்து போயித்தாரு. பிறகு அப்பா வந்து பிரச்சினப்பட்டு பெரிய புதினமெல்லாம் நடந்தது. பிறகு எல்லாம் சரியாப் போயித்து, அப்ப 14 வயசில பிள்ளப் பெத்த நான் அந்நேரம் சோறு கறியெல்லாம் நல்ல ருசியா இருக்கும் மண் சட்டியில தான் சோறாக்கிற. மீனெண்டா பெரிய பெரிய மீன் இவர் வாங்கித்து வருவார்.
இப்போ சோறு கறியெல்லாம் நஞ்சாய் போச்சி, பிள்ள பெத்தா மிளகு தண்ணிச் சாப்பாடுதான் தருவாங்க. பத்தியச் சாப்பாடு சாப்பிட்டுத்தான் வளரந்;தன். எங்கயும் தூரப் போறதெண்டா கரத்தையில் (மாட்டு வண்டி) போறது. என்னவும் என்டா சொந்த பந்தமெல்லாம் ஒரு இடத்தில கூடிடுவம். இப்ப சொந்த பந்தத்த பாக்கிறதே கஸ்டமாயிருக்குது.
இஞ்ச இருக்கிற கண்ணா முனைப் பிள்ளையார இவரும் நானும்தான் சிறாம்பி கட்டி வச்சி வந்தம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொங்கிப் பூசையும் செய்வம். எண்ட புள்ளையள், பேரப்புள்ளையள், பூட்டப்புள்ளையள் எல்லாம் என்ன நல்லாப் பாக்குதுகள்.
இப்ப அரசாங்கத்தால 2250 ரூபா தாராங்க அதில மாப்பெட்டி, தைலம், கோயிலுக்கு கற்பூரம் எல்லாம் வாங்குவன். கல்யாண வீடு என்டா காசு குடுக்கமாட்டான், பெரிய பாத்திரம் வேண்டி என்ட பெயரை எழுதி எண்ட ஞாபகார்த்தமாக இருக்கனும் என்டு குடுப்பன்.
அந்தக் காலத்தாப் போல இந்தக் காலம் இல்லை. உடம்பு வருத்தமெண்டா நாட்டு வைத்தியந்தான் செய்யிறது. வீட்டில சும்மா இருக்க மாட்டம் ஏதாவது ஒரு வேலைய செய்து கொண்டு தான் இருப்பம். வீட்டு வேலை செய்யாட்டி அம்மா அடிப்பாவு. இப்ப ரெண்டொரு நாளாத்தான் நெஞ்சிக்க நோவுது என்றார்.
செல்லம்மா தமது அன்றாடக் கடமைளைத் தானே செய்வது, மூன்று நேரம் தவறாது சாமி கும்பிடுவது போன்றவற்றை செய்து வருகின்றார். சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில் மனப் பாடம் பண்ணிய தேவாரங்களைப் படிப்பதும், தனது பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளிடம் பழங்காலத்துக் கதைகளைக் கதைப்பது என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார்.
அத்துடன் செல்லம்மா ஆச்சியின் கட்டில் வெறும் மரத்தினாலான பலகையைக் கொண்டு செய்யப்பட்டது, அது தற்பொழுது உடைந்த நிலையில் இருப்பதாகவும், அத்துடன் தனது கடமைகளை தானாகவே செய்து வந்த நிலையில் தற்பொழுது ஒருவரின் உதவி தேவைப்படுகின்றது.
அதனால் பிடித்து நடக்கும் ஊண்றுகோல் மற்றும் நுளம்பு வலை போன்ற பொருட்கள் தனக்குத் தேவைப்படுவதாகவும், இந்த பாட்டியின் வறுமை நிலையினைக் கொண்டு நல்ல உள்ளம் படைத்த உறவுகள் எனக்கு உதவி செய்தால் என்னுடைய பிள்ளை போல் அவர்களையும் நேசிப்பேன் என மனமுருக கேட்டுக் கொண்டார்.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் முதுமை அடைந்தால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றார்கள். ஆனால் செல்லம்மாவுக்கு அந்த குறையில்லை வசதி வளம் இல்லாவிட்டாலும் எல்லாப் பிள்ளைகளும் தன்னை கவனித்துக் கொள்கின்றார்கள் என்றார்.
செல்லம்மா ஆச்சி சொல்வதைப் போல் அந்தக் காலத்தில் உரலில் நெல்குத்தி, அம்மியில் மஞ்சள் அரைத்து, ஆட்டுக் கல்லில் உழுந்து அரைத்து, கிணற்று வாளியில் நீர் அள்ளி உடலுக்குக் கொடுத்த பயிற்சியும், அவரது உணவுப் பழக்க வழக்கமுமே இத்தனை காலமும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு காரணமாக இருக்க முடியும்.
இன்று பலர் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாத நிலையிலே இருக்கின்றனர். சொகுசு வாழக்கை கூடி விட்டதால் உடல் ஆரோக்கியமும் கெட்டு மன ஆரோக்கியம் இன்றி மன உளைச்சலில் மனிதர்கள் உழன்று கொண்டிருக்கின்றனர்.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம், இன்று நோயில்லாத மனிதர்களைக் காணப்பது அரிதாகி விட்டது. சிறுவர் முதல் வயோதிபர்கள் வரை தம் வாழ்நாளில் ஒரு; மாத்திரரையத் தானும் வலி நிவாரணமாகப் பயன்படுத்தாவர்கள் எவருமில்லை எனலாம்.
இன்று முதுமையின் அடையாளமாக முதுகு கூனியிருந்தாலும் எம் மத்தியில் வாழும் முதுசொமாக செல்லம்மா ஆச்சி இருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.