இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் ‘உத்தா பஞ்சாப்’ படம் வரும் 17-ந் திகதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
‘உத்தா பஞ்சாப்’ படத்தை தணிக்கை செய்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் படத்தின் பல்வேறு காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, பஞ்சாப் என்ற பெயரையும் தலைப்பில் இருந்து நீக்குமாறு கூறியிருந்தது.
இதனையடுத்து, மும்பை ஐகோட்டை படக் குழுவினர் அணுகினர். பின்னர் மத்திய தணிக்கை வாரியத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, படத்தின் மீதான சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வந்தது.
இதனிடையே, சர்ச்சைக்குரிய உத்தா பஞ்சாப் திரைப்படத்தை ஏ சான்றிதழுடன், சில காட்சிகளை மட்டும் துண்டித்து வெளியிட சினிமா தணிக்கை குழு அனுமதி அளித்தது.
இதனையடுத்து, உத்தா பஞ்சாப் விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை கோரி பஞ்சாப்பை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. படத்தில் பஞ்சாப் மாநிலத்தை பற்றி தவறான சித்தரிப்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் முன்பு நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தா பஞ்சாப் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டை அணுகுமாறு அறிவுறுத்தினர்.
முன்னதாக, வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், “திரைப்படத்தில் உள்ள காட்சிகளை துண்டிக்கவோ, நீக்கவோ, மாற்றவோ தணிக்கை வாரியத்திற்கு அதிகாரம் எதுவும் இல்லை. சான்றிதழ் வழங்குவது தான் தணிக்கை வாரியத்தின் பணியே தவிர சென்சார் செய்வதல்ல. அரசியலைமைப்பு சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி தணிக்கை வாரியம் செயல்பட வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உத்தா பஞ்சாப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்றே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.