உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய காரணியாக, சிகரெட் பார்க்கப்படுகிறது. வழக்கமான சிகரெட்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலையில், தற்போது இளைஞர்கள் இடையே எலக்ட்ரானிக் சிகரெட்கள் வேகமாக பரவி வருகிறது.
இ-சிகரெட் நிகோடின் திரவம் நிரப்பப்பட்டிருக்கும். தேவைப்படும்போது, பட்டனை தட்டிவிட்டு புகைக்கலாம். பின்னர், திரவம் தீர்ந்தபின், அதனை மீண்டும் நிரப்பிக்கொள்ளலாம். இந்நிலையில், இ சிகரெட் என்பவை, அடையாளம் காண முடியாத பல புதிய வகை நோய்களை ஏற்படுத்தக்கூடும் என, சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து கர்நாடகாவில் இ சிகரெட் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மாநிலத்தில் உள்ள இளம் தலைமுறையினரை போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கவே, இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இனிமேல் கர்நாடகாவில் இ சிகரெட்டுகள் விற்பனை செய்தால், ஒரு லட்ச ரூபாய் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இந்தியாவில் எற்கனவே பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இ சிரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.