சென்னை ராயபுரத்தில் பெரிய தாதாவாக இருப்பவருக்கு நைனா என்று பெயர். அப்படி நைனாவாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி விட்டதால், தன்னுடைய மகளான ஆனந்தியை திருமணம் செய்பவரை அடுத்த நைனாவாக்க நினைக்கிறார். இதற்காக அடுத்த நைனா யார் என்ற தேடுதல் நடக்கிறது.
இதற்காக வீரமானவர்களை தேர்வு செய்யும் நிலையில், மிகவும் கோழையான பயந்த சுபாவம் கொண்ட ஜி.வி.பிரகாஷை பெரிய ரவுடி என்று நினைத்து திருமணம் செய்து வைக்கிறார் சரவணன். இறுதியில் ஜி.வி.பிரகாஷ் மிகவும் கோழையானவர் என்று சரவணனுக்கு தெரியவந்ததா? ஜி.வி.பிரகாஷ் நைனாவாக எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய வழக்கமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முன்பை விட நடனம், காமெடி என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியான ஆனந்திக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில் பல கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார்கள். கருணாஸ் பாகுபலி பாணியில் காளகேய மொழி பேசுவது, அதுபோல், யோகிபாபு விஜய், அஜித், தனுஷ் அகியோரின் வசனங்களை பேசுவது என ரசிகர்களை போரடிக்க விடாமல் செய்திருக்கிறார்கள்.
இராயபுரத்தில் தாதாவாக இருப்பவர்களை பற்றி ஒரு காமெடியான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன். ஆனால், படத்தில் ஒரு சில இடங்களில் காமெடி பெரிதாக எடுபடவில்லை. காமெடி படம் என்பதற்காக எந்த விதமான லாஜிக்கும் இல்லாமல் படம் எடுத்திருக்கிறார். ஏதோ படத்தில் ஒன்று குறைவது போல் தோன்றுகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியையும் நன்றாகவே கொடுத்திருக்கிறார். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ சுமாரா இருக்கு.