வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கவும், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சிறை தண்டனை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் வருமான வரித்துறையினருக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நாட்டில் முறையாக வருமான வரி செலுத்தாமல், ஏய்க்கிறவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது.
இப்படி வருமான வரி செலுத்தாமல், ஏய்க்கிறவர்கள் மீது சட்டத்தின் பிடியை இறுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.
இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள் வரியை அபராதத்துடன் செலுத்திவிட்டால் போதும், சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிவிடலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது.
அதில் இப்போது மத்திய அரசு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது எடுக்க வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் பற்றிய வழிமுறை குறிப்புகளை மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிற சி.பி.டி.டி. என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறைக்கு அனுப்பி உள்ளது.
அந்த வழிமுறை குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்று, அபூர்வமாக பயன்படுத்தப்படுகிற இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 276 சி (2) -ஐ பயன்படுத்தவும் அதிகாரிகள் தயங்கக்கூடாது என்பதுதான்.
இந்த சட்டப்பிரிவின்படி, வருமான வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்க முடியும். சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்க இயலும்.
அத்துடன் அவர்களது சொத்துகளை ஜப்தி செய்து, ஓராண்டுக்குள் விற்பனை செய்யவும் வழி இருக்கிறது.
இந்த சட்டப்பிரிவின்படி நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.ஓ. என்னும் வரி மீட்பு அதிகாரியை வருமான வரித்துறை அமர்த்தி உள்ளது. இந்த டி.ஆர்.ஓ. கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும், தேவையான ஆள்பலத்தையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வேண்டுமென்றே வருமான வரி செலுத்தாதவர்களை கைது செய்து, காவலில் வைக்க வகை செய்கிற வருமான வரிச்சட்டத்தின் விதிகள் 73-ல் இருந்து 81 வரையிலானவற்றை வரி மீட்பு அதிகாரி பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வழிமுறை குறிப்பு கூறுகிறது.
வேண்டுமென்றே வரி செலுத்தாமல் இருக்கிறபோது, தனது அதிகாரத்தை டி.ஆர்.ஓ. பயன்படுத்த வேண்டும்; தொடர்ந்து ஒருவர் நீண்டகாலமாக வரி செலுத்தாமல் ஏய்த்து வந்திருக்கிறபோது, அவரை கைது செய்து காவலில் வைக்கிற தனது அதிகாரத்தை டி.ஆர்.ஓ. பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பை பொறுத்தமட்டில் எல்லா மட்டத்திலும் வரி வசூல் செய்வது ஒன்றை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படவும், இது தொடர்பாக டி.ஆர்.டி. என்னும் கடன் மீட்பு தீர்ப்பாயம் வரை செல்லவும் டி.ஆர்.ஓ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய வழிமுறைகளை பின்பற்றி, வரி செலுத்தாமல் யாரும் எளிதில் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.