பிரபல இந்தி நடிகை பிபாசா பாசு. இவர் தமிழில் விஜய்யுடன் சச்சின் படத்தில் நடித்துள்ளார். அரைகுறை ஆடையில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதாக சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
சமீபத்தில் யோகா தினத்தையொட்டி கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிபாசா பாசு அழைக்கப்பட்டு இருந்தார். பிபாசா பாசு யோகா பயிற்சி பெற்றவர். தினமும் யோகா மற்றும் தியானம் செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார்.
சக நடிகைகளுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறார். எனவேதான அவரை பெங்களூருவில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தனர். பிபாசா பாசுவுடன் மாநில முதல்-மந்திரி சித்த ராமையாவும் யோகாவில் கலந்துகொண்டார்.
இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபாசா பாசுக்கு ரூ.1½ கோடி கொடுக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அத்துடன் பிபாசா பாசு பெங்களூரு வந்து செல்வதற்கான விமான பயணச்செலவை கர்நாடக அரசே ஏற்றுள்ளது. அவர் ஆடம்பர ஓட்டலில் தங்குவதற்கும் பெரிய செலவு செய்துள்ளனர்.
யோகா நிகழ்ச்சி சமூக நலன் சார்ந்தது. அதற் காக ஒரு நடிகைக்கு பெரிய தொகை கொடுத்து வரவழைத்து அரசு பணத்தை விரயம் செய்வதா? என்று கர்நாடக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பணம் வாங்கிக்கொண்டு இதில் பங்கேற்ற பிபாசா பாசை விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்படுகின்றன.