காளி வெங்கட்டும், கலையரசனும் அண்ணன், தம்பிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும், மற்றவர்களால் இவர்களுக்கு பிரச்சினையென்றால் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவருடைய அப்பா சொந்த ஊரிலேயே சிறியதாக சோடா கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். காளி வெங்கட்டுக்கு நெடுநாட்களாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால், அவருக்கு எந்த பெண்ணும் அமையவில்லை.
இவர்களது வீட்டுக்கு அருகிலேயே வைஷாலி மற்றும் அவரது குடும்பத்தினர் குடியேறுகிறார்கள். வைஷாலியை அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக சேர்ந்து சைட் அடித்து வருகிறார்கள். இதில் கலையரசனுக்கு கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, கலையரசன் தனது காதலுக்கு இடைஞ்சலாக இருப்பார் என்று நினைத்து அவனை கல்லூரிக்கு அனுப்பி விடுகிறார் காளி வெங்கட்.
கல்லூரியில் நாயகி ஷலின் ஜோயாவை சந்திக்கும் கலையரசன், அவளை காதலித்து வருகிறார். இதன்பிறகு, கல்லூரி படிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும் கலையரசன், தனது அண்ணன் காளி வெங்கட், இன்னமும் வைஷாலியிடம் காதலை சொல்லாமல் அவள் பின்னாலேயே சுற்றி வருவதை பார்த்து, காளியை உசுப்பேற்றி விடுகிறான்.
இதனால், காளி பிரச்சினையில் மாட்டிக்கொள்ள வைஷாலி குடும்பத்திற்கும், காளி குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்படுகிறது. பின்னர் வைஷாலி குடும்பத்தினர் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்றுவிடுகின்றனர். இறுதியில், காளி வெங்கட் வைஷாலியை தேடிக் கண்டுபிடித்து அவருடன் சேர்ந்தாரா? கலையரசனின் கல்லூரி காதல் என்னாயிற்று? என்பதே மீதிக்கதை.
காளிவெங்கட் முழுநீள கதாநாயகன் போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். காமெடி, செண்டிமென்ட் என எல்லாவிதத்திலும் அசத்தியிருக்கிறார். கூடவே ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அதுவும் இவருக்கு ரொம்பவும் நன்றாக வந்திருக்கிறது. தன்னால் எந்தவொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யமுடியும் என்பதை இந்த படத்தில் நிரூபித்து காட்டியிருக்கும் காளி வெங்கட்டை பாராட்டியே ஆகவேண்டும்.
இதுவரை காதல், ஆக்ஷன் என கலக்கிய கலையரசன் இப்படத்தில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். மேலும், தனக்கே உண்டான காதல், ரொமான்ஸ் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வைஷாலி கிராமத்து பெண்ணாக மனதில் எளிதில் பதிகிறார். இவருடைய நடிப்பும் அபாரம். கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது.
இன்னொரு நாயகியாக வரும் ஷலின் ஜோயா மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம். படத்தில் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கலையரசனின் கல்லூரி நண்பனாக வரும் பாலசரவணன் காட்சிகள் எல்லாம் கலகலக்க வைத்திருக்கிறது.
இயக்குனர் உஷா கிருஷ்ணன் தனது முதல்படமே ஒரு கிராமத்து பின்னணியில் காமெடி, செண்டிமென்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார். நமது குடும்பத்திலும் இப்படியொரு அண்ணன்-தம்பி இருக்கமாட்டார்களா? என்று ஏங்கவைக்கும் அளவுக்கு கதையை உருவாக்கியிருக்கிறார். அளவான கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிக்கும்படியான ஒரு கதையை கொடுத்த இவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஒரு காட்சி சோகமாக சொல்லும்போதே, அடுத்த காட்சியை கலகலப்பாக கொடுத்து ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்திருக்கிறார்.
பி.சி.முத்தையா ஒளிப்பதிவில் கிராமத்து அழகு பளிச்சென்று இருக்கிறது. கதைக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கேற்றவாறு உள்ளது.
மொத்தத்தில் ‘ராஜா மந்திரி’ மகுடம் சூடும்.